ரஜினிக்கு இது கூட தெரியவில்லையே... அது தான் எனக்கு வருத்தம்- மு.க.ஸ்டாலின்
சென்னை: குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் கஷ்ட-நஷ்டங்களையும், கொடுமைகளையும் நடிகர் ரஜினிகாந்த் தெரிந்துகொள்ளவில்லை என்பது தான் தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அதை வைத்து பீதி கிளப்பப்படுவதாகவும் ரஜினி நேற்று பேட்டியளித்த நிலையில் ஸ்டாலின் இன்று அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ரஜினிகாந்த் சிந்திக்க வேண்டும் என்றும், இது குறித்து ஆய்வு செய்து அவர் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கையெழுத்து இயக்கம்
குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பபெற வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், குடியுரிமை சட்டத்தால் முஸ்லீம்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை, சில அரசியல் கட்சிகள் பீதி கிளப்புகின்றன எனவும் கூறியிருந்தார். இது திமுகவை அவர் மறைமுகமாக விமர்சித்து சூசகமாடி சாடியுள்ளார் கூறப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிகர் என்றும், அவருக்கு அரசியல் தெரியவில்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் சுடச்சுட பதிலடி கொடுத்தார்.

வருத்தமளிக்கிறது
இந்நிலையில் சென்னை கோவளத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தில் இடம்பெற்றுள்ள கொடுமைகளை ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளவில்லையே என்பதை நினைக்கும் போது தமக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது எனத் தெரிவித்தார். சி ஏ ஏ-வில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை ரஜினி அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சிந்திக்கவும்
குடியுரிமை சட்டம் விவகாரத்தில் மாணவர்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறும் ரஜினிகாந்த், முதலில் இந்தச் சட்டத்தின் பாதிப்பு குறித்து அவர் சிந்தித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறினார். குடியுரிமை சட்டத்தில் இருக்கும் பாதகங்களை ரஜினிகாந்த் தெரிந்துகொண்டால், அவரது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறினார். வழக்கத்தை விட இந்தப் பேட்டியின் போது ரஜினி மீது சற்று சீற்றம் அதிகமாக இருந்தது.

அதிமுக
அதிமுகவும், பாமகவும் இஸ்லாமிய மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாகவும், குடியுரிமை சட்டத்தை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை தாம் வலியுறுத்தியும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை என விமர்சித்தார். கையெழுத்து இயக்கம் தொடங்கிவிட்டோம் என்பதோடு தாம் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை எனவும், இதனை இன்னும் முடுக்கிவிடும் பணியில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications