மொய் விருந்து ‘அஞ்சாறு மாங்காய்?’ - அண்ணாமலை விமர்சனத்துக்கு ராஜீவ் காந்தி பதிலடி.. பண்பாடு தெரியாம!
சென்னை : மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக் குமார், தனது பேரக்குழந்தைகளின் காதணி விழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி மொய் விருந்து நடத்தினார். இந்த மொய் விருந்தில் ரூ. 11 கோடி மொய் பணம் வசூலானது.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ மொய் விருந்து போட்டு 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, மக்களையும் அரசையும் முட்டாளாக்க நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அண்ணாமலையின் விமர்சனத்துக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை தொலைபேசி உரையாடல்.. எடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.. மதுரை சைபர் கிரைமில் புகார்!
மொய் வேட்டை
திமுக எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில், 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பாக நடத்துவது மொய் விருந்து. அதைத் தன் சுய லாபத்திற்காக, 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச் சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார்.
விஞ்ஞான பூர்வ வித்தை
சுமார் 40 மொய்வாங்கும் கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை எண்ண பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது. இது சாத்தியமா? அங்கே தான் நிக்கிறது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. 2 லட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிக்களை வைப்பது குற்றம். வங்கியில் ரூ.50,000க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும். அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய். இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமையையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர்" என்று விமர்சித்திருந்தார்.
இதுவே சாட்சி
இதற்கு திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த மொய் விருந்து பற்றிய அறிக்கையை படித்தேன். தமிழர்களின் பண்பாடு மற்றும் தமிழ்நாட்டின் அரசியலும் அவருக்கு தெரியாது என்பதற்கு இது தான் சாட்சி. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இந்த மொய் விருந்து என்பது அப்பகுதியில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. குறிப்பாக அந்த பகுதிகளில் நடக்கும் மொய் விருந்துகளில் இயல்பாகவே ரூ.5 கோடி, ரூ.6 கோடி என்று வசூலாகும். ஏனென்றால் அந்த மக்களின் பழக்க வழக்கப்படி ஒவ்வொரு குடும்பமும் ஆயிரத்தில் தொடங்கி ஒரு லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்ப மொய் வைப்பார்கள்.
அண்ணாமலை மறைத்துவிட்டார்
இந்த நடைமுறை தென்மாவட்டம் வரை நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பணத்தை முழுக்க முழுக்க கிப்ட் என்று தான் எடுக்க முடியும். மொய் என்பது இந்நாட்டு சட்டப்படி கிப்ட் தான். அமைச்சரவை பதவியில் உள்ளவர்கள் அந்த பதவியை துஷ்பிரயோகம் பண்ணுவதற்காக வாங்கக் கூடாதே தவிர மற்றபடி அவர்கள் சொந்த நிகழ்ச்சியில் வாங்கி கொள்ளலாம் என்பது தான் சட்டம். ஆனால் அண்ணாமலை ஒன்றை மட்டும் தனக்கு வசதியாக மறைத்து விட்டார்.
பாஜக எப்படி சம்பாதித்தது
2014ல் வெறும் ரூ.214 கோடியாக இருந்த பாஜவின் ஒட்டுமொத்த சொத்து இன்று 2022ல் ரூ.5200 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஏறத்தாழ 81 சதவீதம் கூடியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இந்த ரூ.5000 கோடி வருமானம் எப்படி வந்தது என்று அவர்களால் கணக்கு காட்ட முடியுமா? வருமானவரி விலக்கு மற்றும் கிப்ட் என்ற அடையாளத்தை உள்ளே சொருகி கொள்கின்றனர். வங்கியில் ரூ.2 லட்சத்துக்கு மேல் போட முடியாது. எப்படி இந்த 6 ஆண்டுகளில் பாஜவுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. இதற்கான விளக்கம் இருக்கிறதா? ஏனென்றால் அதானி, அம்பானி பெரும் பணக்காரர்கள் அரசு பணத்தை சுரண்டுவதற்கு, அரசு நிறுவனத்தை வாங்குவதற்கு சட்டப்படியாக பேரம் பேசிவிட்டு சட்ட விதிகளை மீறி, சட்டத்துக்கு உட்பட்டு பணம் கொடுப்பதாக பல ஆயிரம் கோடிகளை பாஜவுக்கு கொட்டிக் கொடுத்துள்ளனர்.
மிகப்பெரிய விந்தை
இப்படி கொல்லைப்புறத்தில் ஊழலை செய்து விட்டு, 'நாங்கள் ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று அண்ணாமலை சொல்வது மிகப்பெரிய விந்தையாக உள்ளது. மொய் விருந்தால் மக்களுக்கு நஷ்டம் என்று சொல்கிறார். ஆனால் அப்பகுதி மக்களில் யாரையாவது மொய் விருந்து கொடுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்களா? இதில் மொய் செய்தவர்களுக்கு திருப்பி அதே அளவுக்கு மொய் செய்வார்கள். இது சேமிப்பின் அடையாளம். அதை முறைப்படி வங்கியில் செலுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்துகிறார்கள். இதில் எங்கு அண்ணாமலை குற்றம் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.
அண்ணாமலைக்கு பண்பாடு தெரியவில்லை
நீங்கள் எனக்கு மொய் செய்தால், உங்கள் வீட்டில் எப்போது விசேஷம் வருகிறதோ அப்போது நான் திருப்பி செய்வேன் என்பது தான் அப்பகுதியின் பழக்க வழக்கங்கள். ஆனால் அண்ணாமலைக்கோ, மக்களின் பழக்க வழக்கம் தெரியாமல், பண்பாடு தெரியாமல், இந்து வைதீக மரபு தெரியாமல் அவர் அரசியல் செய்வதற்கு இது தான் சாட்சி. அவர் ஒன்று செய்யலாம். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, எப்படி பாஜகவின் சொத்து மதிப்பு இத்தனை கோடி உயர்ந்தது, 5ஜி ஏலத்தில் இத்தனை கோடி நஷ்டம் ஏற்பட்டது, 3 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக அம்பானி மாறினார் என்று அவரிடம் கேட்டு சொல்லட்டும். அப்படி செய்தால் உண்மையிலேயே அண்ணாமலையை பாராட்டலாம்" எனத் தெரிவித்துள்ளார்.