ராஜராஜ சோழன் விவகாரம்: இயக்குநர் ரஞ்சித் மீது திமுகவின் கே.எஸ். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
சென்னை: தலித்துகள் நிலங்களை ராஜராஜ சோழன் பறித்ததாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது தவறானது என திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தலித்துகளின் நிலங்கள் பறிக்கப்பட்டதாக விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?
ஆம். செய்யப்பட்டன. அதற்கான காரணங்களும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடமிருந்து மட்டும் நிலங்கள், அரசால் கையகப்படுத்தப் பட்டனவா ?
இல்லை. எல்லா இனத்தவரிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
எப்போது கையகப்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் உள்ளனவா ?
உண்டு. கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
எதற்காக பறிமுதல் செய்யப்பட்டன ?
1. பிறன் மனை கவரும் துரோகிகள்,
2. கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்து, தன்னுடைமை ஆக்கிக்கொண்டார்.
3. அரசருக்கோ, அரச குடும்பத்தினருக்கோ, அரசுக்கோ, கடும் தீங்கு செய்து, இராஜத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மேற்கூறப்பட்ட குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டவர்களின், நிலங்கள், சொத்துகள், உடைமைகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் பொருளானது, கோவில் கணக்கிலோ, ஊர்ச்சபை நிர்வாகக் கணக்கிலோ, வரவு வைக்கப்பட்டுள்ளது.
இராஜராஜர் எம் நிலத்தைப் பறித்துக்கொண்டார் என ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், எவராவது அவர்மேல் குற்றம் சுமத்துகிறார் எனில், அவர் யாராயிருக்கக் கூடும் ?
பதில், உங்கள் விருப்பத்திற்குறியது.
அவ்ளோதாங்க விஷயம்.. !
இவ்வாறு ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications