விலை போகாத 4 கத்தரிக்காய்.. வார்த்தையை விட்ட அண்ணாமலை.. “பிஞ்சிலேயே வெம்பி..” திமுக கொடுத்த பதிலடி!
தேசிய அரசியல் தலைவர்களை விலைபோகாத கத்தரிக்காய்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு திமுக காட்டமாக பதில் கொடுத்துள்ளது.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய அரசியல் தலைவர்களை விலைபோகாத கத்தரிக்காய்கள் என விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது.
திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை தேசிய அரசியல் தலைவர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்தியது திமுக.
இந்த பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் தேசிய அரசியலுக்கு ஏற்கனவே வந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

கும்மிடிப்பூண்டியை தாண்டவில்லை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், சென்னையில் நடந்த தனது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தான் தேசிய அரசியலுக்கு வந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியை தாண்டி தேர்தலில் போட்டியிடாத திமுக தேசிய அரசியலில் ஈடுபடுவதாக சொல்வது வேடிக்கையானது. நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றவர்கள் தேசிய அரசியலுக்கு வந்தவர்கள். திமுக எப்போது தேசிய அரசியலுக்கு வந்தது? மம்தா பானர்ஜியின் கூட்டத்திலும் டெல்லியிலும் பேசினால் அது தேசிய அரசியலா? என்று கடுமையாக அட்டாக் செய்தார்.

கத்தரிக்காய்கள்
மேலும் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களைப் பாருங்கள். ஜம்மு காஷ்மீரில் அரசியல் செல்வாக்கை இழந்த முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு சொந்த கட்சியினரே ராய்ப்பூர் சென்ற போது மரியாதை கொடுக்கவில்லை, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ஜேஜேஸ்வி யாதவ் தற்போது தான் அரசியலுக்கு வந்தவர். இதுபோன்ற 4 விலைபோகாத கத்தரிக்காய்களை கொண்டு வந்து பிறந்தநாள் விழா மேடையில் ஏற்றி முதல்வரை மார்க்கெட் செய்கிறார்கள்.

விலை போகுமா?
அந்த கத்தரிக்காயே விலை போகவில்லை.. அதுகூட சேர்ந்த புடலங்காய் எப்படி விலை போகும்? கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் கூட தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அதனால் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. பிரதமர் மோடியின் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன், வரும் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமையும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

திமுக பதிலடி
இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. முரசொலி நாளேட்டில் பட்டிக்காடும் பட்டணமும் என்ற தலைப்பிலான பகுதியில் அண்ணாமலையின் விமர்சனத்துக்கு காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:
"பட்டிக்காடு: ஏன் தம்பி.. மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை விலை போகாத கத்தரிக்காய்கள் என்று மாநில பாஜக தலைவர் கூறியிருக்கிறாரே..

பிஞ்சிலேயே வெம்பிய காய்
பட்டணம்: ஆமாம் ஐயா அந்த நால்வரும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள். மதச்சார்பின்மை, சமூக நீதி சமத்துவம் ஆகிய உயரிய லட்சியங்களை எழுதி பிடிப்பவர்கள். அதன் காரணமாக தான் அவர்களைப் பார்த்து விலை போகாத கத்தரிக்காய் என்று எரிச்சலில் கூறியிருக்கிறார் அண்ணாமலை. விலை போகிறதா இல்லையா என்பதை அங்காடிதான் முடிவு செய்யும். அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. அண்ணாமலை பிஞ்சிலேயே வெம்பிய காய். அவர் பேசுவது எல்லாம் அவரது கட்சியினருக்கு எட்டிக்காய். பேராசைக்காரனை சுட்டிக்காட்டும் மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காய் மேல் என்ற பழமொழியை நினைவு கொள்வது அவருக்கு நல்லது" என முரசொலி பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications