அண்ணாமலை போன இடமும், ஆமை புகுந்த வீடும் எப்பவுமே.. ரிசல்ட் எப்படி?.. அட்டாக் செய்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக தேர்தல் பணியாற்றிய கர்நாடகாவில் பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில், அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை போன இடமும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்று ஊரில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகா தேர்தலுக்காக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

சார்ஜ் எடுத்த அண்ணாமலை : கர்நாடகா சட்டசபை தேர்தலை தமிழ்நாடு உற்று நோக்குவதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு தேர்தல் பணியாற்றியதும் முக்கிய காரணம். கர்நாடகாவில் பல ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அண்ணாமலைக்கு இருப்பதை கருத்தில்கொண்டு அவரை தேர்தல் இணைப் பொறுப்பாளராக டெல்லி பாஜக தலைமை களமிறக்கியது.
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 10 மாவட்டங்களில் உள்ள 86 தொகுதிகள், அண்ணாமலை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. இதனால் தனது திறமையையும், ஆளுமையையும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, கர்நாடகாவிலேயே தங்கியிருந்து தீவிர களப்பணி ஆற்றி வந்தார் அண்ணாமலை.

தூக்கி எறியப்பட்ட பாஜக : வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை வகுப்பது, தேர்தல் வியூகங்களைச் செயல்படுத்துவது என முக்கியப் பணிகளை அண்ணாமலை கவனித்து வந்தார். அண்ணாமலை பம்பரமாகச் சுழன்று வேலை செய்த போதிலும், கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இந்த முறை 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடகா தோல்வியின் மூலம் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது பாஜக.

குறிப்பாக, அண்ணாமலை களப்பணியாற்றிய தொகுதிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கைப்பற்றியது. இது அண்ணாமலைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்த படுதோல்வியை அடுத்து அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
அண்ணாமலை போன இடம் : இந்நிலையில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தலில் கடுமையாக பொறுப்பேற்றுக்கொண்டு பணியாற்றினார். அவருக்கு இது பெரிய பாடமாக அமைந்திருக்கும். கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலையும் ஒரு காரணம்.
பல பொய்களை சொல்லி அண்ணாமலை அங்கு ஓட்டு கேட்டார். இப்போது ஊரில் என்ன பேச ஆரம்பித்து விட்டார்கள் என்றால், அண்ணாமலை போன இடமும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்லத்தக்க அளவுக்கு நிலைமை போயிருக்கிறது." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications