இது பொற்கால ஆட்சியா? வெளியே சொன்னால் வெட்கக் கேடு! லிஸ்ட் போட்ட நயினார் நாகேந்திரன்
சென்னை: தி.மு.க. அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றியதாகக் கூறுவது வெட்கக் கேடானது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ரூ. 2000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டுவதாக சொன்னீர்களே அதையாவது கட்டினீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ரூ. 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 90-இல் சொன்னீர்களே, அதைச் செய்தீர்களா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே?
மருதையாற்றில் திருமானூர், தா.பழூர், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி, புஞ்சைபுகலூர், நன்னியூர், குளித்தலை ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று கொடுத்த வாக்குறுதி, கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மக்கள் வறட்சியால் தவிப்பு
இந்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டதால் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.
தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஏமாந்து, தற்போது தாகத்திற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தள்ளாடும் இந்த வேளையில், "99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது" என்று முழங்குவது வெட்கக்கேடானது.
கொடுத்த வாக்குறுதியை வீசியெறிந்து, தாகத்தில் தவிக்க விட்ட இந்த திமுக அரசு தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகுதூரமில்லை என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications