நீட் திமுக வேஸ்ட்.. முதல்வரும், உதயநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும்.. அமர்பிரசாத் ரெட்டி
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் திமுகதான் என்று பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் வீண் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களை தவறாக வழி நடத்தியதால் முதல்வர் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS மற்றும் JIPMER ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. National Testing Agency என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. அரியலூர் அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை நீட் தேர்வினால் உயிர்பலி வாங்கப்பட்டவர்கள். தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பது மாணவர்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி நீண்ட நாட்களுக்கு பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12ம்தேதி நடைபெற்றது. இதில் அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். மேலும் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார். குரோம்பேட்டையில் வசித்த வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் மரணமடைந்த துக்கத்தில் இருந்த தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் வரும் 20ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திமுகவின் கூட்டறிக்கையில், "தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனிடையே நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் குறித்து பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீட் தற்கொலைகளுக்குக் காரணம் திமுகதான் என்றும் அமர்பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் வெறும் வீண் என்று குறிப்பிட்டுள்ள அமர்பிரசாத் ரெட்டி, உதயநிதி ஸ்டாலின் நீட் தடைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாணவர்களிடம் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது. நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அமர்பிரசாத் ரெட்டி, இந்த தற்கொலைகளுக்கெல்லாம் திமுகதான் காரணம். இனியும் நீட் தேர்வில் இளைஞர்களை தவறாக வழிநடத்த வேண்டாம். ஆன்மா சாந்தியடைய உதயநிதியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications