"150" அவங்களுக்கு.. மிச்சம்தான் உங்களுக்கு.. ரொம்ப உஷாரா இருங்க.. திகில் கிளப்பிய ரிப்போர்ட்!
திமுகவுக்கு வெற்றி பெறும் தொகுதிகளை உளவுத்துறை தந்துள்ளது
சென்னை: மிக மிக கவனமாக அதேசமயத்தில் தீவிரமாக களப் பணியாற்றாவிட்டால் மிக மிக சிரமம் என்று ஆளுங்கட்சிக்கு உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளதாம். அதில் கூறப்பட்டுள்ள பல விவகாரங்கள் ஆளுங்கட்சியை அப்செட் செய்துள்ளதால் களப்பணிகளை முதல்வர் முடுக்கி விட்டுள்ளாராம்.
அதிமுகவைப் பொறுத்தவரை இந்த முறை மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க மிகத் தீவிரமாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதில் மிக கவனமாக இருக்கிறார்.
களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போலவே தீயாக வேலை செய்து வருகிறார்கள் அதிமுகவினர்.
முன்னணி
மறுபக்கம் திமுகவும் தனது பணிகளை தீவிரமாக்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே அது தனது பணிகளைத் தொடங்கி விட்டதால் முன்னணியிலும் இருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் கை தற்போது ஓங்கியிருப்பாக உளவுத்துறையும் ஒரு தகவலை ஆளுங்கட்சிக்குத் தெரிவித்துள்ளதாம்.
கணிப்புகள்
அதாவது இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 150 தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளதாக உள்துறை அறிக்கை கூறியுள்ளதாம். இதுதான் ஆளுங்கட்சியை அப்செட் ஆக்கியுள்ளதாம். பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூட இதையேதான் சொல்லி வருகின்றன என்றாலும் தற்போது உளவுத்துறையும் இதேபோல சொல்லியிருப்பதால் ஆளுங்கட்சி சற்றே கவலைக்குள்ளாகியுள்ளதாம்.
பிரச்சாரம்
அதிமுக எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் தற்போது பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாம், தீவிரமாக களப் பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அதிமுகவன் பிரசாரம் இதையடுத்து தற்போது தீவிரமடைந்துள்ளது.
உத்திகள்
எங்கெல்லாம் தீவிரம் காட்ட வேண்டுமோ அங்கெல்லாம் தீவிரமாக இறங்குமாறும், திமுகவின் பிரசார உத்திகளை முறியடிக்கும் வகையில் செயல்படுமாறும் முதல்வர் தரப்பிலிருந்து உத்தரவு போயிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் திமுகவும் தனது பணிகளை முடுக்கி விட்டு பதலடி கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.