ஆளுநரின் அதிகாரம்.. அடிமடியில் கை வைக்கும் திமுக! அதென்ன சட்டப்பிரிவு 361? இதை கவனிச்சீங்களா!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. அதில், ஆளுநருக்கு குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361 திருத்தப்படும் என கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், மாநில அரசால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரை வாசிக்கப்படும். இதனை மாநில அரசுதான் தயார்படுத்தி கொடுக்கும். இந்த உரை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வாசிப்பதற்காக வழங்கப்படும்.

இப்படி ஒப்புதல் அளித்த உரையையே இந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. கடந்த ஆண்டு சில முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு உரையை வாசித்தார். இது தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது. இது தவிர, திருக்குறள், ஜியு.போப், கார்ல் மார்க்ஸ், திராவிட மாடல் என பல்வேறு விஷயங்களில் ஆளுநரின் கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அன்றைய தினம் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்கு சென்று தமிழ்நாடு ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியிருந்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது,
"இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என்று கூறியிருந்தார்.
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, கோயில் தலைமை பூசாரி இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதில், எங்களுக்கு எந்த அச்ச உணர்வும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் ஆளுநரின் பேச்சு குறித்த நம்பகத்தன்மை மீது பகிரங்கமாக கேள்வி எழுப்பியது.
மறுபுறம் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், இதற்காக விளக்கத்தை மாணவர்களுடன் நடக்கும் கலந்துரையாடலில் கொடுப்பதும் ஆளுநர் மீதான விமர்சனங்களை மேலும் கூர்மையடைய செய்தது. இந்நிலையில்தான், "ஆளுநருக்கு குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361 திருத்தப்படும்" என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
சட்டப்பிரிவு 361ஐ பொறுத்த வரையில், மாநில ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் எந்த நீதிமன்றத்திலும் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் தொடர கூடாது. மாநில ஆளுநரை கைது செய்ய அல்லது சிறையில் அடைப்பதற்கான எந்த செயல்முறையும் அவரது பதவிக் காலத்தில் எந்த நீதிமன்றத்திலிருந்தும் வெளியிடப்படாது.
சுருக்கமாக சொல்வதெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்களை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை திருத்துவதாகத்தான் திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறது.
மட்டுமல்லாது, ஆளுநர் எனும் பதவி நிரந்தரமாக ஒழிக்கப்படும் வரை, மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் திமுக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications