வேலூர்: ஜாதி சங்க கட்சி நிர்வாகிகளை வளைத்துப் போட்ட ஏ.சி.சண்முகம்... திமுக தலைமை ஷாக்
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் பிற கட்சியில் உள்ள தமது முதலியார் சமூகத்தினரை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வளைத்துப் போட்டதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் 2-வது இடமும் திமுக வேட்பாளருக்கு 3-வது இடமுதான் கிடைத்தது. ஏ.சி. சண்முகத்தைப் பொறுத்தவரையில் செங்குந்த முதலியார் வாக்குகளை முழுமையாக தம் பக்கம் கொண்டுவந்தாலே போதும்... அதிமுக ஆதரவுடன் வென்றுவிட முடியும் என்பது கணக்கு.
தற்போதும் இதே பார்முலாவைத்தான் கடைபிடித்து அதிரடி காட்டி வருகிறார். இதில் வேடிக்கை என்னவெனில் ஏ.சி. சண்முகம் கட்டுப்பாட்டில் செயல்படும் செங்குந்த முதலியார் சங்கத்தின் மாவட்ட செயலாளரே திமுக நிர்வாகிதான். இதனால் அவர் ஏ.சி. சண்முகத்துக்கு வாக்களிக்க கோரும் முதலியார் சமூக கூட்டத்துக்கும் போகிறார். திமுக பிரசாரத்துக்கும் செல்கிறார்.
இதேபோல் பல திமுக நிர்வாகிகள் ஏ.சி. சண்முகத்துக்காக வேலை பார்க்கின்றனர். ஏற்கனவே துரைமுருகன் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் அவரது மகன் ஜெயித்தால் தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என நினைக்கின்றனர்.
இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் பாடம் தர வேண்டும் என்பதற்காகவே திமுகவுக்கு எதிராக வேலை செய்வது அல்லது வேலையே செய்யாமல் வேடிக்கை பார்ப்பது என உள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் திமுக தலைமைக்கு சென்றதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
தேர்தல் நேரத்தில் எந்த ஒரு எச்சரிக்கையோ, நடவடிக்கையோ எடுத்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் அமைதி காக்கிறதாம் திமுக தலைமை.