’பகுத்தறிவாளர்’ கருணாநிதிக்கே கோவிலா??... அதிருப்தியில் திமுக சீனியர்கள்!
சென்னை: வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராகவே வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சிகள் குறித்து திமுக தலைமை மவுனமாக இருந்து வருவது அக்கட்சியில் மூத்த தலைவர்களை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளதாம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கை பிடித்து பகுத்தறிவாளராக வாழ்ந்தவர் கருணாநிதி. தேர்தல் அரசியல் களத்தில் இருந்தபோதும் தாம் பெரியாரின் கொள்கை வழிவந்தவர் என்பதை தமது பேச்சுகள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தவர்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் எனப்படும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தை நிறைவேற்றியவர். இடஒதுக்கீட்டை பல்வேறு களமுனைகளில் ஆழமாக செயல்படுத்தியவர் கருணாநிதி. வாழ்நாளின் கடைசிவரை பகுத்தறிவாளராகவே திகழ்ந்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு கோவில்
தற்போது கருணாநிதிக்கு சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திமுகவினர் சிலை அமைத்து திறப்பு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் அருகே குச்சிக்காடு கிராம மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் ரூ30 லட்சம் செலவில் கருணாநிதிக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடத்தி இருக்கின்றனர்.
கருணாநிதி பகுத்தறிவாலயம்
தங்களுக்கு 3% இடஒதுக்கீடு பெற்று தந்த காரணத்தால் கருணாநிதிக்கு ‘பகுத்தறிவாலயம்' அமைக்கிறோம் என்கின்றனர் கிராம மக்கள். அதாவது அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் பாணியில் கருணாநிதி பகுத்தறிவாலயம் இது என்கின்றனர். பூமி பூஜை போடப்பட்டு கட்டப்படும் கோவில் எப்படி பகுத்தறிவை பரப்பும் என்பது புரிபடாத கேள்வி.
தலைமை மவுனம்
அத்துடன் கருணாநிதிக்கு கோவில் என்று சொல்லப்படுவதை இந்துத்துவா அமைப்பினர் மிக கடுமையாக ஏகடியம் செய்து வருகின்றனர். ஆனால் பகுத்தறிவாளர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவது தவறு என்பதை திமுக தலைமை இதுவரை கண்டிக்காமல் கருத்து சொல்லாமல் மவுனமாக இருந்து வருகிறது.
தலைமை மீது அதிருப்தி
திமுக தலைமையின் இந்த மவுனம் அக்கட்சியில் எஞ்சியிருக்கும் கொள்கை பற்றாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக தங்களது அதிருப்தியை மூத்த தலைவர்களிடம் பகிர்ந்தும் வருகின்றனர்.
மவுனம் கலையுமா?