திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி! மாவட்ட நிர்வாகிகள் நியமனம் ஜரூர்! நேர்காணல் நடத்தும் தயாநிதி மாறன்
சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்டந்தோறும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளில் தயாநிதி மாறன் எம்.பி. தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் மாநில செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான நிர்வாகிகளை மாவட்ட அளவில் நியமிப்பதற்கான நேர்காணலை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வருகிறார்.

திமுக வரலாற்றில்
திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி கடந்த மாதம் உருவாக்கப்பட்டது. இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, சேலம் எம்.பி. பார்த்திபன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயாநிதிக்கு ஏமாற்றம்
திமுகவில் முக்கிய பதவியை எதிர்பார்த்த தயாநிதி மாறனுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தாலும் கூட, திமுகவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அணிக்கு முதல் மாநிலச் செயலாளர் என்பதால் அதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு காரியமாற்றத் தொடங்கியுள்ளார்.

புதிய நிர்வாகிகள்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கான நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வரும் தயாநிதி மாறன் நேர்காணலின் போது பல்வேறு கேள்விகளையும் முன் வைக்கிறார். நேர்காணலை நடத்தி முடித்தவுடன் இரண்டு மாதங்களுக்குள் புதிய நிர்வாகிகள் லிஸ்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள்
இதனிடையே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் இளைஞர்களை மட்டுமே அதிகளவில் நிர்வாகிகளாக நியமனம் செய்ய வேண்டும் என்பதில் தயாநிதி மாறன் எம்.பி. உறுதியாக இருக்கிறார். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் ஆர்வம் காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications