Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது சிவில் சட்டம், ஜனவரியில் அயோத்தி கோவில்- தேர்தலுக்காக மத உணர்வுகளை தூண்டுது பாஜக- சாடுது திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்கிறது மத்திய பாஜக அரசு என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் லோக்சபா தேர்தலுக்காகவே அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது எனவும் திமுக சாடியுள்ளது.

முரசொலியின் இன்றைய தலையங்கம்: அடுத்த குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. தயாராகி வருகிறது. இந்தியாவில் பொது சிவில் சட்டம் - என்பதுதான் அவர்கள் அடுத்து எடுக்கப் போகும் குழப்ப அஸ்திரமாக இருக்கப் போகிறது!

DMK strongly condemns to Centre on Uniform Civil Code

மக்களுக்கு நேரடியாக எந்த நன்மையையும் செய்து பெயர் வாங்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்தது இல்லை. அவர்களுக்கு அந்த நினைப்பு இருந்ததும் இல்லை. இருந்திருந்தால் தேர்தலில் அளித்த எத்தனையோ வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருப்பார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இல்லை. உழவர்களுக்கு அவர்களது விலைபொருளின் விலையை இரண்டு மடங்கு ஆக்கவும் இல்லை. வெளிநாட்டில் பதுக்கி இருந்த கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. எவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடவும் இல்லை. கள்ளப்பணத்தை ஒழிக்கவும் இல்லை. தீவிரவாதம் ஒழியவும் இல்லை. விலைவாசியை குறைக்கவுமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இல்லை. அமெரிக்க பொருளாதாரத்துக்கு எதிராக உயர்த்தவும் இல்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியை மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்றார்களே தவிர, அதுவும் நடக்கவில்லை. இப்படி மொத்தமும் வெறுங்கையில் முழம்- போடுவதும், வாயால் வடை சுடுவதுமான காட்சிகளைத் தான் பார்க்கிறோம் ஒன்பது ஆண்டுகளாக!

அடுத்த ஆண்டு ஒட்டுக் கேட்டு வர வேண்டியதாக இருக்கிறது. என்ன செய்யலாம்? இனிமேல் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. பணமும் இல்லை, குணமும் இல்லை. மனமும் இல்லை. அதனால் மக்களது மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாப அறுவடை செய்யலாமா என்று பார்க்கிறது பா.ஜ.க. அயோத்தியில் ராமர் கோவிலை வருகிற சனவரி மாதம் திறக்கப்போகிறார்களாம். அடுத்து, பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதற்கான வேலையை சட்ட ஆணையம் மூலமாகத் தொடங்கி இருக்கிறார்கள்.

தேர்தலுக்காக: பொது சிவில் சட்டம் பற்றி பொதுமக்களிடமும் மத அமைப்புகளிடமும் கருத்துக் கேட்கப் போகிறதாம் சட்ட ஆணையம். நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22 ஆவது சட்ட ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கருத்துகளை தெரிவிக்க விரும்புபவர்கள் அதன் உறுப்பினர் செயலரின் மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது சட்ட ஆணையத்தின் இணைய தள இணைப்பிலோ தெரிவிக்கலாமாம். இது நாட்டில் புதிய விவாதத்தையும் சர்ச்சையை மட்டுமே கிளப்புமே தவிர, அமைதிக்கு வழிவகுக்காது. நாடு முழுவதும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் கொந்தளிப்பை எதிர்கொண்டு வரும் பா.ஜ.க. அதில் இருந்து திசை திருப்புவதற்காக இந்த தந்திர உத்தியைக் கையில் எடுத்துள்ளது.

பொது சிவில் சட்டம்: 21 ஆவது சட்ட ஆணையமானது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஆம் ஆண்டு தனது அறிக்கையை வழங்கியது. 'நாட்டில் பொதுசிவில் சட்டம் தேவையுமில்லை, அது தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதும் அல்ல' என்று அந்த ஆணையம் கூறியிருந்தது.

  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு முரணானது.
  • மதச்சார்பின்மைக்கு எதிரானது.
  • நாட்டின் பன்முகத் தன்மையை பொதுசிவில் சட்டம் மூலமாக சமப்படுத்த முடியாது.
  • சமூகத்தின் பலவீனமான குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை இழக்கக் கூடாது.
  • முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது என்பது அனைத்து வேறுபாடுகளையும் நீக்குவது அல்ல.
  • வெவ்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள் இருப்பது என்பது பலமான ஜனநாயகப் பண்பையே காட்டுகிறது.

- என்றெல்லாம் சொன்னது 21 ஆவது சட்ட ஆணையம். இவை அனைத்தையும் பட்டவர்த்தனமாக நிராகரித்த பா.ஜ.க. தான், 22 ஆவது சட்ட ஆணையத்தை அமைத்துள்ளது. பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவது நோக்கமாக இருக்குமானால், அதற்கு எதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்க வேண்டும்? இதனை விட கண்துடைப்பு இருக்க முடியுமா?

பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு சொத்து மட்டும் திருமணச் சட்டங்களைப் பின்பற்றுவது இந்த தேசத்துக்கு அவமானமாம். அதற்காக பொதுச் சட்டம் வேண்டுமாம்?

விவாகரத்து, வாரிசு, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் ஆகிய விவகாரங்களில் வெவ்வேறு சட்டம் பயன்படுத்தப்படுவது அவமானம் என்றால்... தீண்டாமையால் ஒரு மனிதன் புறக்கணிக்கப்படுவது இந்த நாட்டின் அவமானம் அல்லவா? ஏழை என்பதால் ஒருவன் புறக்கணிப்படுவது தேசத்தின் அவமானம் அல்லவா? இன்னார் என்பதால் அந்த மனிதன் கோவில் அர்ச்சகராக ஆக முடியும், மற்றவர் ஆகமுடியாது என்பது அவமானம் இல்லையா? இன்ன ஜாதி என்பதற்காக ஒரு சில தொழில்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது இந்த தேசத்தின் அவமானம் இல்லையா? சனாதனத்தை ஒரு மாநிலத்தின் ஆளுநர் பகிரங்கமாக ஆதரித்து பேசுவதும் - பெண் என்பதால் ஒரு பழங்குடி குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்படுவதும் தேசத்தின் அவமானம் இல்லையா?

ஜாதி இல்லை -அனைவரும் சமம் என்று ஏன் பொதுசமூகச் சட்டம் கொண்டுவர முடியவில்லை? 'தீண்டாமையை சட்டப்படி ஒழிப்பதால் பயனில்லை, ஜாதி பார்ப்பது குற்றம் - அதனை சட்டப்படி தடை செய்யுங்கள்' என்று தந்தை பெரியார் தானே சொன்னார். 'பொதுவானவர்கள்' எங்கே போனார்கள்? இது பற்றி பொதுவானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களா? வேறுபாடு கற்பிக்கும் இவைதான் தேச அவமானங்கள்.

திருமணம், சொத்து ஆகியவற்றில் மதங்களுக்குள் இருப்பவை மாறுபட்ட பழக்க வழக்கங்கள். யாரையும் தாழ்த்தவும் இல்லை, உயர்த்தவும் இல்லை. உண்மையான தேச அவமானம் துடைக்க முயற்சிக்காமல் தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தத் துடிக்கவே பொதுசிவில் சட்டம் என்பதைக் கையில் எடுக்கிறார்கள்.

இவ்வாறு திமுகவின் முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+