மோடி ஆட்சியில் வாயில் சுட்ட வடை! 5 அடியில் பிரமாண்ட வடை! பாஜகவுக்கு எதிராக பெரம்பூரில் நூதன பிரசாரம்
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றவில்லை எனக்கூறி பெரம்பூரில் 10 ஆண்டுகாலம் மோடி ஆட்சி வாயில் சுட்ட வடை’ என்று நூதன பிரசாரத்தை திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ள அமைப்பு மேற்கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்டத்திலேயே தமிழகத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி போடும் கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து முடித்துவிட்டனர். தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரம், தொலைக்கட்சிகளில் விளம்பரம் என அரசியல் கட்சிகள் மக்களை கவர பல்வேறு வழிகளிலும் பிரசாரங்களை செய்து வருகின்றன.
ஐந்தரை அடியில் வடை: மக்களை எளிதாக கவரும் விதமாக சில நூதன பிரசாரங்களும் நடைபெறுகின்றன. அந்த வகையில், தான், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் நூதன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று விமர்சித்து மோடி ஆட்சி வாயில் சுட்ட வடை என 5 அரை அடியில் பெரிய வடையை சுட்டு, மோடி நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு காட்டியுள்ளது.
நூதன பிரசாரம்: பெரம்பூரில் இந்த நூதன பிரசாரத்தை தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேர்தலுக்கு தேதி அறிவிக்கும் முன்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக இதேபோன்று நூதன பிரசாரத்தை கையில் எடுத்து இருந்தது. பொதுமக்களுக்கு மோடி அரசு அல்வா கொடுத்து விட்டதாக அல்வா பாக்கெட்டுகள் விநியோகம் செய்வது.. மோடியின் வடைகள் என நிறவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, சுடச்சுட மக்களுக்கு விநியோகம் செய்வது.. என விதவிதமான பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர்.
வாயால் சுட்ட வடை: கடந்த 7 ஆம் தேதி, நெல்லையில் 'மோடியின் வடை கடை' என்ற பதாகையுடன் சுடச்சுட வடைசுட்டு கொடுத்து திமுகவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல், கோவை, திருப்பூரிலும் இதேபோன்று நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை சுட்டு வழங்கியதுடன், பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனக் கூறியும் பிரசாரம் செய்தனர். மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை துண்டு சீட்டில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வினோத முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications