முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வீழ்த்த தீவிரம்.. விராலிமலையை கைப்பற்ற திமுக பிளான்! புது வேட்பாளர்?
புதுக்கோட்டை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வீழ்த்தினால்தான் புதுக்கோட்டை மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற முடியும் என்பதால், அவரை தோற்கடிக்க தீவிரம் காட்டி வருகிறது திமுக தலைமை. இதற்காக வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தப்பட உள்ளதாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் தளபதியாக இருந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 2011, 2016, 2021 என தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் விஜயபாஸ்கர். இதற்கு முக்கிய காரணம், திமுக விராலிமலை அந்த தொகுதியை சரியாக கவனிக்காததுதான் என்று கூறப்படுகிறது.

விராலிமலை தொகுதி, அண்ணா முதல்முறை ஆட்சி அமைக்கும்போது வென்ற தொகுதிகளில் மிக முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக 1971-ல் கருணாநிதி முதல்வரானபோதும் விராலிமலையில் வாகை சூடியிருந்தது திமுக. அதன்பின்னர் தொகுதி மறுவரையினால் விராலிமலை தொகுதி இல்லாமல் ஆனது.
இந்நிலையில்தான், 2011 சட்டமன்றத் தேர்தலின்போது விராலிமலை தொகுதி மீண்டும் உருவானது. அப்போது, அந்த தொகுதியில் தற்போதைய அமைச்சர் ரகுபதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து முதல்முறையாக போட்டியிட்ட விஜயபாஸ்கர், வெற்றியும் பெற்றார். அதன்பிறகு, 2016, 2021 என இரு தேர்தல்களிலும் விராலிமலையில் திமுக சார்பில் பழனியப்பன் என்பவர் போட்டியிட்டார். ஆனால், இரு முறையும் விஜய்பாஸ்கரே வெற்றி பெற்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது 2016-ல் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜயபாஸ்கர், 2021 சட்டசபை தேர்தலில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, விராலிமலையை அதிமுக கோட்டை என மாற்றினார்.
விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக வெற்றி பெற முக்கிய காரணமே, திமுகவின் தவறான வேட்பாளர் தேர்வு தான் உள்ளூர் திமுகவினரே வெதும்புகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, குட்கா ஊழல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவுக்கு சாதகமான தொகுதியில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற, வேட்பாளர் வலுவாக இல்லாததுதான் காரணம் என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
எனவே இந்த முறை விராலிமலையை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்பது திமுகவினருக்கு கொடுக்கப்படும் முக்கிய டாஸ்க் என்கிறார்கள். இதற்கு வசதியாக, விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தை 4 ஆக பிரித்து அண்மையில் உத்தரவிட்டது திமுக தலைமை.
அதைத்தொடர்ந்து அதிமுகவின் விஜயபாஸ்கரை தோற்கடிக்க, வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். கட்சியினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாகப் பணியாற்றும் நபரைத்தான் இம்முறை தேர்வு செய்ய ஆயத்தமாகிறதாம் தலைமை.

புதுக்கோட்டை திமுகவில் கோஷ்டிப் பூசல்கள் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், வேட்பாளராக தேர்வு செய்யும் நபர் எல்லோருக்கும் பொதுவான ஒருவராக இருக்கவேண்டும் என திமுக தலைமை கருதுகிறதாம். அதற்கான வேட்பாளர் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
அந்தவகையில், சுமார் 40 ஆண்டுகாலமாக திமுகவில் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்து தற்போது அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் கே.எஸ். சந்திரன் இந்த ரேஸில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications