ராஜ்யசபா தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்- திமுக வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
சென்னை: திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொமுச சண்முகம் உட்பட பலர் களத்தில் இருக்கும் நிலையில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது. இதையடுத்து இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. ஜூலை 8-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள். ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவு ஜூலை 18-ல் நடைபெறும்.
இதனிடையே நாளையே திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் 3 எம்.பிக்களை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும்.
இதனடிப்படையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு இடம் என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு இடத்தை காங்கிரஸ் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் திமுக தலைமை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவிலேயே தொமுச சண்முகம், என்.ஆர். இளங்கோ, வில்சன், ஈரோடு முத்துசாமி, கம்பம் செல்வேந்திரன் என பலரது பெயரும் ராஜ்யசபா வேட்பாளர்கள் என அடிபடுகின்றன.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் சண்முகத்துக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்துக்கு மெரினாவில் இடம்வாங்கி கொடுத்தார் என்பதற்காக வில்சன் கிச்சன் கேபினட் மூலம் படுதீவிரமாக முயற்சிக்கீறார்.
இவர்கள் அல்லாமல் திமுகவை வலிமைப்படுத்தும் வகையில் மேற்கு மண்டலத்துக்கும் தென்மண்டலத்துக்கும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கலாமா என்கிற யோசனையையும் திமுக தலைமை பரிசீலிப்பதாக கூறப்பட்டது. இதனடிப்படையில்தான் ஈரோடு முத்துசாமி, கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன் பெயர்கள் அடிபட்டன.
இதனால் திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.