ராஜ்யசபா: அங்கிட்டு வேல்முருகன், சுபவீ... இங்கிட்டு காங்.? என்ன செய்யும் திமுக?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு அமோக வாக்குகளை அள்ளிக் கொடுத்தது தமிழகம். இப்போது திமுக ஆதரவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற செய்தி கடும் சர்ச்சையாகி உள்ளது.
2009-ம் ஆண்டு ஈழ இறுதி யுத்தத்தில் 1.5 லட்சம் தமிழர்களை அப்போதைய மகிந்த ராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைக்கு இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு முழு வீச்சில் உதவியது என்பது குற்றச்சாட்டு.
இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை உருவாக்கியது. தற்போதைய தேர்தலில் கூட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றிருக்கிறது. ஆனால் சொந்த இனத்தையே படுகொலை செய்த கட்சிக்கு வாக்குகளை வாரி கொடுத்திருக்கிறதே தமிழகம் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

3 எம்.பிக்கள்
இந்நிலையில் திமுக சார்பில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது. அதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஒருவர் என்பது உறுதியாகி உள்ளது.

வைகோ, வேல்முருகன், சுபவீ
வைகோவுடன் சேர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீ. போன்றோரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்ய திமுக ஆதரவளிக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இங்கிட்டு இவர்
ஈழத் தமிழர்களை தீவிரமாக ஆதரிக்கும் வைகோ, வேல்முருகன், சுப.வீ. ஆகியோருக்கு வாய்ப்பு தருவதா? ஈழத் தமிழர் இனப்படுகொலையில் குற்றம்சாட்டப்படும் மன்மோகன்சிங்கை ஆதரிப்பதா? என்கிற இடியாப்ப சிக்கலில் சிக்கி இருக்கிறது திமுக தலைமை. லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளையும் திராவிடர் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய வெற்றியை அறுவடை செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக முடிவு என்ன?
அடுத்து வர உள்ள ராஜ்யசபா தேர்தலில் என்ன மாதிரியான முடிவெடுக்கப் போகிறார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்கள் இது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications