ஜெயலலிதா மீது திமுகவின் திடீர் பாசம்.. என்னாச்சு?
சென்னை : எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் பல வினோதமான காட்சிகளை பார்த்து வருகின்றனர். தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.
Recommended Video

முன்பு புகழ்ந்தவர்களை தற்போது விமர்சித்தும், முன்பு விமர்சித்தவர்களை இப்போது புகழ்ந்தும் அரசியல் தலைவர்கள் பலர் பேசி வருகின்றனர். இதை அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரமாக பார்த்தாலும், மக்கள் இதை நல்ல பொழுது போக்காகவே நினைத்து ரசித்து வருகின்றனர்.
பொதுவாக தேர்தல் பிரசாரம் என்றால் எதிர்த்து போட்டியிடும் கட்சியினரை கடுமையாக விமர்சித்தும், அவர்கள் மீது குற்றம் குறை கூறியும் தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக, எதிர்க்கட்சியினரை புகழ்ந்து பேசிய ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஜெயலலிதா மீது திமுக., விமர்சனம்
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அவரை பல விதங்களில் விமர்சித்து, பல வழக்குகளை போட்டது திமுக. ஜெயலலிதாவை ஊழல் ராணி என பெயர் வைத்து மிக கடுமையாக விமர்சித்ததும் திமுக.,தான். அதிமுக - திமுக எதிரெதிர் கட்சிகள் என்பதை விட எதிரி கட்சிகள் என்றே சொல்லிக் கொண்டனர்.

பலமுறை குட்டு வைத்த ஐகோர்ட்
ஜெயலலிதா மீது பல அவதூறு வழக்குகள் போட்டதற்காக திமுக.,வை கோர்ட் பலமுறை கண்டித்துள்ளது. அரசியல் காழ்புணர்ச்சிக்காக அவதூறு வழக்குகள் போட்டு, கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டித்தது. சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலாவையும் மிக மோசமான வகையில் விமர்சித்ததையும் கோர்ட் கண்டித்தது.

ஜெ.,மீது திடீர் பாசம்
ஜெயலலிதா மரணமடைந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இதுவரை அவரை பற்றி பேசாமல் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கியதில் இருந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து, உண்மை வெளிக் கொண்டு வரப்படும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறி வருகிறார். திமுக.,வின் தேர்தல் அறிக்கையிலும் இது முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஜெ.,வை புகழும் திமுக தலைகள்
திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல இன்று தேர்தல் பிரசாரம் செய்த திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஜெயலலிதா போல் யாருக்கும் சாமர்த்தியம் கிடையாது என புகழ்ந்து பேசி உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஜெயலலிதா துணிச்சலானவர். அவர் உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வை வர விடவில்லை என புகழ்ந்து பேசினார்.

அக்கறையா? தேர்தல் யுக்தியா?
திமுக.,வினர் உண்மையிலேயே ஜெயலலிதா மரணம் பற்றி கண்டறியும் அக்கறை, அவர் மீதான மரியாதையால் புகழ்கிறார்களா இல்லை தேர்தல் யுக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக வெளியிட்ட சில அறிவிப்புக்களை, தேர்தல் அறிவிப்பதற்கு முன் அவசரமாக அதிமுக அமல்படுத்தி அதை ஓட்டுக்களாக மாற்ற முயற்சித்ததை போல், திமுக.,வும் இந்த புதிய ட்ரிக்கை பயன்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

யாருடைய ஓட்டுக்களை கவர முயற்சி
திமுக.,வின் இந்த யுக்தி அதிமுக ஓட்டுக்களை பெறவா அல்லது அமமுக.,வின் ஓட்டுக்களை பெறவா. அதிமுக அரசு செய்ய தவறியதை சுட்டிக் காட்டியோ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என அறிவிப்புக்களை வெளியிட்டோ பிரசாரம் செய்வதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரை திடீரென திமுக பயன்படுத்த வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திமுக.,வின் இந்த தேர்தல் வியூகம் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications