ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக களமிறக்க திமுக தலைமையும் காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் தந்தது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவெரா, திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் பிப்ரவரி 27-ல் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது முதலே எந்த கட்சிகள் போட்டியிடும்? யார் வேட்பாளர்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். அதிமுக இரண்டாக பிளவுபட்டு பாஜகவின் பிடியில் சிக்கி இருக்கும் நிலையில் நடைபெறும் தேர்தல். ஆகையால் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட விரும்பினால் மட்டுமே, அத்தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பது என திமுக தலைமை முடிவு செய்திருந்ததாம். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவனோ இளைய மகன, சஞ்சய் சம்பத்துக்கு சீட் கேட்டு மனு கொடுத்து கொண்டிருந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனை விட சஞ்சய் சம்பத்தையே போட்டியிடவைக்கலாம் என அவரது குடும்பத்தினரும் விரும்பினர். இன்னொரு பக்கம், மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்துக்கே சான்ஸா? எனக்கும் வாய்ப்பு தாங்க என கோதாவில் குதித்தார் காங்கிரஸின் மக்கள் ராஜன்.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது அக்கட்சியின் மேலிடம். ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்ததன் பின்னணி குறித்து நாம் விசாரித்தோம். அப்போது, திமுகவைப் பொறுத்தவரை இது கவுரவ பிரச்சனை. ஆகையால் என்னதான் காங்கிரஸ் போட்டியிட்டாலும் முழு வீச்சில் களமிறங்கி தேர்தல் பணியாற்ற விரும்புகிறது. சஞ்சய் சம்பத் போன்ற புதுமுகங்களுக்கு இறங்கி வேலை செய்வதைவிட ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற தலைவர்களுக்காக இறங்கி வேலை செய்வதே திமுக தலைமை தோதாக பார்க்கிறதாம். இடைத்தேர்தலில் மூத்த தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக வேலை செய்யும் போது எந்த தொய்வும் இல்லாமல் இருக்கும் என்பதும் திமுக தலைமையில் விருப்பமாம். இதனையே காங்கிரஸ் மேலிடத்திடமும் அழுத்தமாக சொன்னதாம் திமுக. இந்த காரணங்களை அப்படியே காங்கிரஸ் மேலிடமும் ஏற்றுக் கொண்டதாம். அதாவது ஈவிகேஎஸ் இளங்கோவனை திமுகவே ஜெயிக்க வைத்துவிடும் என்கிற போது எதற்காக சஞ்சய் சம்பத், மக்கள் ராஜன் என புதுமுகங்களை இறக்கி அக்னி பரீட்சையில் சிக்க வேண்டும் என கணக்குப் போட்டதாம். இதனையடுத்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுகவும் மூத்த அமைச்சர்களை உள்ளடக்கிய மெகா தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்தது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications