மோடி அழைப்புக்கு மறுநாளே ஸ்டாலின் பதில்.. பாஜக கூட்டணி பற்றி பரபரப்பு அறிக்கை
Recommended Video

சென்னை: மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன், திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நேற்று வீடியோவில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்றும், பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. 1999ல், திமுகவும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. எனவே பழைய நண்பர்கள் என்று மோடி, திமுகவை சொல்கிறாரோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

மோடி-திமுக நட்பு
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோபாலபுரம் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதன் பிறகு கருணாநிதி மறைவுக்கும் நரேந்திர மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதுபோன்ற சூழ்நிலைகளால் பிரதமர் மோடி, அழைப்புக்கு திமுக செவி சாய்க்குமா என்ற பேச்சு எதிர்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே, ஸ்டாலின் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் கூட, மோடியின் நேற்றைய அழைப்பு அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஸ்டாலின் அறிக்கை
இந்த நிலையில்தான் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். சரியான மனிதர், தவறான கட்சியில் இருந்தார் என்று, வாஜ்பாய் குறித்து, கருணாநிதி குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தியுள்ள, ஸ்டாலின் மோடி, வாஜ்பாய் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி
கருணாநிதியின் சிலை திறப்பு விழா சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற போது ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து திமுக, தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணியில் தான் உள்ளது என்பதை தெரிவித்திருந்தார் ஸ்டாலின். இப்போது பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் நேரடியாகவே தெரிவித்துவிட்டார் ஸ்டாலின்.

அதிமுக நிலை என்ன?
இதனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணி மட்டுமே இப்போது பாஜகவிற்கு எஞ்சிய வாய்ப்பாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அதிமுக தலைமை, இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், தமிழகத்துக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களோடுதான் கூட்டணி என்று கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு யார் துரோகம் இழைப்பார்களோ அவர்களுடன் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications