கனிமொழி எம்.பி. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! மாற்றியோசித்த திமுக மகளிரணி பிரமுகர்!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளுக்காக அக்கட்சியின் மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ என்பவர், ஸ்பெஷல் சேலை ஒன்றை பிரத்யேகமாக உருவாக்கி பரிசளிக்கவுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் சேலையானது இப்போது தான் மகளிரணியை சேர்ந்த அம்மு ஆன்றோவிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கனிமொழி உருவம் பொறிக்கப்பட்ட சேலை குஜராத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி எம்.பி.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி வருகிறது. இதனை மகளிரணி நிர்வாகிகளும், கனிமொழி ஆதரவாளர்களும் இப்போதே கொண்டாட தயாராகிவிட்டனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ என்பவர், கனிமொழியின் முழு உருவம் பொறிக்கப்பட்ட சேலையை குஜராத்தில் பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

3 மாதங்கள்
இந்த சேலையின் முந்தானையில் கனிமொழியின் முழு உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோர் படங்களும், அண்ணா அறிவாலயத்தின் படமும் அந்த சேலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதமே இதற்கான ஆர்டரை கொடுத்துவிட்டார் மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ. மூன்று மாதங்கள் கழித்து இந்த பிரத்யேக சேலை இப்போது தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றியோசி
கனிமொழி பிறந்தநாளுக்கு வித்யாசமான முறையில் பரிசளிக்க வேண்டும் என விரும்பிய அம்மு ஆன்றோ, மாற்றியோசித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உருவங்களை பட்டு நூலிழையால் நெய்து, பிரத்யேக பட்டுச்சேலையை உருவாக்கி கவனம் ஈர்த்திருந்தார் மறைந்த சற்குணப் பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்.

விலை விவரம்
கனிமொழி உருவம் பொறிக்கப்பட்ட பிரத்யேக சேலையின் விலை குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. திமுக மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் இந்த சேலையின் படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications