முதலமைச்சர் பேரு “செப்பண்டா”.. தெலுங்கில் வாக்கு சேகரித்த திமுக! அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தெலுங்கில் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் சூழலில், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவினர் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தெலுங்கு பேசும் மக்களை சந்தித்து தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரா ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியை மையப்படுத்தி தமிழ்நாடு அரசியல் களமே சுழன்று கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அக்கட்சி திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து உள்ளது.

நாம் தமிழர், தேமுதிக
திமுக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த், தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோரை அந்த கட்சிகள் அறிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

அதிமுக வேட்பாளர்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் அதிமுக வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனின் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இரட்டை இலையில் போட்டியிடுகிறார் தென்னரசு.

வேட்பாளர் பட்டியல்
ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து நிலையில் தங்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதனை அடுத்து வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர் போட்டியிடுகிறார்கள்.

திமுக தேர்தல் பிரச்சாரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஈரோடு செல்ல உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.
|
தெலுங்கில் பிரச்சாரம்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர் திமுகவினர். அக்கட்சியின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவினர் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "முதலமைச்சர் பேரு செப்பண்டா, 4000 ரோக்கம் தீர்த்துரா" என்று அவர்கள் தெலுங்கி பேசி வாக்கு சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications