புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான்.. மோடியால் முடியாதது ஷாவால் முடியுமா.. ஆர்.எஸ்.பாரதி கிண்டல்
சென்னை: மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கிண்டல் செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி 8 முறை வந்த போது திமுக 40 தொகுதிகளிலும் வென்றதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி, மோடியால் முடியாதது அமித் ஷாவால் முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் மதுரையில் திமுக தரப்பில் மதுரையில் பிரம்மாண்டமாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றதால், பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மதுரையில் பொதுக்குழு நடத்தியதால், திமுக தரப்பில் தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் காட்டி வருவதாக பார்க்கப்படுகிறது.

மதுரையில் அமித் ஷா
இந்த நிலையில் திமுக பொதுக்குழு நடத்திய மதுரையின் அதே பகுதியில் பாஜக நாளை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். இன்று இரவு மதுரை வரும் அமித் ஷா, தென் மாவட்ட தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கிறார். இதனால் மாநில அளவிலான பாஜக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்கள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். அதேபோல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் பாஜகவின் குறியும் தென் மாவட்டங்களை ஒட்டியே அமைந்துள்ளது.
முக்குலத்தோர் சமூகம்
கடந்த முறையை விடவும் இந்த முறை தென் மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அச்சமூக வாக்குகளை குறி வைத்து பாஜக காய்களை நகர்த்தி வருவதாகவும் பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்த நிலையில் அமித் ஷா வருகை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான்.. நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட நரேந்திர மோடி 8 முறை வந்து சென்றார். அதன்பின்னரும் திமுக கூட்டணி 40க்கு 40 வென்று சாதித்தது. அதனால் அமித் ஷா வந்துவிட்டு போகட்டும். மோடியை விடவா அமித் ஷா பெரிய நிர்வாகி.
மோடியால் முடியவில்லை
இதனை அவர்கள் முடிவு செய்யட்டும். மோடியால் முடியாததை ஷாவால் முடியும் என்றால், அந்த முடிவை அவர்களிடம் விட்டுவிடுகிறோம். மோடி வந்த போது, ரோடு ஷோ கூட செய்தார். அதன்பின்னரும் திமுக வென்றது என்று தெரிவித்தார். தொடர்ந்து கேகே ஷா தான் திமுக ஆட்சியை கலைத்தவர். அதுபோல் அமித் ஷா இம்முறை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவார் என்று சொல்வது என்று சொல்கிறார்கள்.
வரலாறு தெரியுமா?
இது குறித்த கேள்விக்கு, அதே கேகே ஷா தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட அன்று மாலை கருணாநிதியை பற்றி சிறப்பாக பேசினார். கேகே ஷா என்றால் கலைஞர் கருணாநிதி ஷா என்று காலையில் கூறினார். மாலையில் ஆட்சியை கலைப்பதற்கு கையெழுத்து போட்டார். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் வரலாறு என்னவென்று தெரிந்து கொண்டு பேசட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications