உங்க எம்.பிக்கள் 8 பேர் எங்க காணாம போனாங்க? சதி வேலை எடுபடாது.. திமுகவுக்கு அதிமுக கொடுத்த பதிலடி!
சென்னை: அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் சிறுபான்மையின மக்கள் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து திமுக பொய்யால் நிரம்பிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
திமுக அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், உங்களுடைய சுய விளம்பர, அரைவேக்காட்டு அரசியலுக்கு அஇஅதிமுக-வை சீண்டாதீர்கள் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் விஸ்வ இந்து பரிஷத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அலகாபாத் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இஸ்லாமியர் குறித்து நீதிபதி சேகர் குமார் அவதூறாகப் பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை திமுக எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குழு கபில் சிபல் தலைமையில் மாநிலங்களவை செயலாளரிடம் சமர்பித்துள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்ய 50 எம்.பிக்களின் தேவை உள்ள நிலையில் 55 மாநிலங்களவை எம்.பிக்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
திமுக மாநிலங்களவை எம்.பிக்கள் என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், எம்.எம். அப்துல்லா ஆகியோர் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை என திமுக விமர்சித்துள்ளது.
அடிமை அதிமுகவோ, ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிசாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள் என அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் INDIA கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேர் மட்டும் தானே கையெழுத்து போட்டுள்ளனர்... மீதம் எட்டு பேர் என்ன காணாமல் போய்விட்டார்களா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், சிறுபான்மையின மக்கள் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து திமுக தரப்பில் வழக்கம் போல பொய்யால் நிரம்பிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எங்கள் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் யாரும் எதுவும் கேட்காத நிலையில், எதற்கு இந்த பொய் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள் திமுக? அதுவும் கல்லெறி அமைச்சரின் பெயரில்? உங்கள் INDIA கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேர் மட்டும் தானே கையெழுத்து போட்டுள்ளனர்... மீதம் எட்டு பேர் என்ன காணாமல் போய்விட்டார்களா?
உங்களுடைய சுய விளம்பர, அரைவேக்காட்டு அரசியலுக்கு அஇஅதிமுக-வை சீண்டாதீர்கள். இந்த மசோதா மாநிலங்களவையில் வரும் போது அதிமுக பதில் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கும். உங்களுடைய இந்த பித்தலாட்ட அரசியல் சதி, தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications