ஆடம்பரம் வேண்டாம்.. அ.ம.மு.க.வினருக்கு டி.டி.வி தினகரன் அன்பு வேண்டுகோள்!
சென்னை: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் பிறந்த நாள் வருகிற 13-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தனது பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கட்சியின் தொண்டர்களுக்கு டி.டி.வி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகள் என் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால் எனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அறிந்தேன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் பாசத்திற்கும், பற்றுக்கும் தலை வணங்குகிறேன்.

அதே நேரத்தில், இத்தகைய கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதற்குப் பதிலாக ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முழுவதுமாக மீண்டெழ உதவுவதையும் அந்த நாளில் தாங்கள் செய்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்குச் செலவழிப்பதை விட மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக அமையும். அத்தகைய செயல்பாட்டையே தாங்கள் அளிக்கும் பெரிய பிறந்தநாள் பரிசாகவும், வாழ்த்துகளாகவும் எண்ணி இதயம் நிறைந்திடுவேன். இவ்வாறு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications