தீவிரமடைந்த கனமழை.. "இரவில் ஆர்டர் போடாதீங்க".. ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்ளூர் அறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து நீர் வெளியேற்ற கூடாது. இரவு நேரங்களில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தொடர் மழை காரணமாக மேட்டூரில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில் அதிகாலையில் இருந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை... 4 மாவட்டங்களில் களமிறங்கிய பேரிடர் மீட்பு படை.. அவசர எண்கள் அறிவிப்பு!
ஆலோசனை
இந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். காவிரி கரையோர மாவட்டங்கள், மழை அதிகம் பெய்யும் தென் மாவட்டங்கள் என்று 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஸ்டாலின் மீட்டிங்
காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முழுக்க பெய்யும் மழை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. காவிரிக்கு வர கூடிய நீர் வரத்து குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அதேபோல் காவிரி கரையோரங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மற்ற அணைகளில் நீர் அளவு எவ்வளவு இருக்கிறது என்று ஆலோசனை செய்யப்பட்டது. சென்னையில் மழை, வெள்ள முன்னேற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.
உத்தரவு
ஆலோசனையின் முடிவில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், உள்ளூர் அறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து நீர் வெளியேற்ற கூடாது. இரவு நேரங்களில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது. மக்களுக்கு அறிவித்த பின்பே அணைகளில் நீர் வெளியேற்ற வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய உணவுகளை உறுதி செய்ய வேண்டும். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
அறிவுரை
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகளை செய்ய வேண்டும். நிலை அலுவலர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். மழை காரணமாக அறுவடை செய்த நெல் மூட்டைகள் வீணாகிவிட கூடாது. இவற்றை பாதுகாப்பான குடோன்களுக்கு உடனே மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.