பன்னீருக்கு போனை போட்ட அண்ணாமலை.. கண்கள் சிவந்த எடப்பாடி.. யாராவது போனீங்கனா.. ஷாக் உத்தரவு
சென்னை: அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவை தமிழ்நாட்டில் வளர வைப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலும் கேரவனில் பயணம் செய்யும் இவர் ராமநாதபுரம் - சென்னை வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த பயணம் தற்போது சிவகங்கை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் 7வது நாள் ஆகும் இன்று.
அண்ணாமலை என்ன சொன்னார்?: அண்ணாமலை பெரும்பாலும் கேரவனில் செல்கிறார், 3- 4 கிலோ மீட்டர் மட்டுமே தினமும் நடக்கிறார் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்த யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை, ஓ பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன் .
கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
எடப்பாடி விரும்பவில்லை: அண்ணாமலையின் இந்த பேட்டியை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் பற்றி அண்ணாமலை இப்படி பேசி இருக்க கூடாது. அவர் எல்லை மீறிவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம். இதோடு அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
அதாவது நடைப்பயணத்திற்கு இடையே அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளாராம். இவர்கள் என்ன பேசினார்கள், ஏன் பேசினார்கள், ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவிற்கு வர போகிறாரா என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது.

இந்த தகவல் அரசால் புரசலாக கேட்டு எடப்பாடி பழனிசாமி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.. இதன் காரணமாகவே இனிமேல் யாரும் அண்ணாமலை நடைப்பயணத்தை எட்டி கூட பார்க்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம். அதாவது அண்ணாமலை உங்கள் ஏரியா பக்கம் வருவார். அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் அண்ணாமலையை பார்க்க செல்ல கூடாது . அண்ணாமலை நடத்துவது பாஜக யாத்திரை.
அது அப்படியே இருக்கட்டும். அவ்வளவுதான். இதில் நாம் தலைகாட்ட கூடாது. அவர் யாத்திரை பக்கம் யாராவது சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அண்ணாமலை யாத்திரைக்கு அதிமுக சார்பாக ஆட்களையும் அனுப்ப கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இதன் காரணமாகவே சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்ணாமலை யாத்திரைக்கு சென்ற போது அவரை சந்திக்க எந்த அதிமுக நிர்வாகியும் செல்லவில்லை. அவர் பயணத்தில் எந்த அதிமுக மாவட்ட செயலாளர்களும் கூட்டணி மரியாதையை நிமித்தமாக கூட செல்லவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications