சொத்து பத்திரங்களில் தவறு இருக்கா? திருத்த பத்திரம் இருக்கே.. பத்திரப்பதிவு செய்யும்போது இதை பாருங்க
சென்னை: திருத்த பத்திரம் என்றால் என்ன? எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும்? பத்திரங்களில் பிழைகள் இருந்தால், அதனை சரிசெய்ய முடியுமா? இதற்கான முத்திரை கட்டணம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
பொதுவாக, பத்திரங்களை எழுதியபிறகு கவனமாக படித்து பார்க்க வேண்டும். மூலப்பத்திரத்திலும், எழுதிய சொத்து ஆவணமும் சரியாக உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். பட்டாக்கள் சரியாக இருந்தாலும், பத்திரங்களில் சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும்.

ஒருவேளை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால், இது பின்னாளில் சிக்கலை தந்துவிடும். தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப்பத்தினாலோ, லே அவுட் பெயர் மாறினாலோ, பின்னாளில் யாருக்காவது சொத்தை விற்கும்போது தேவையில்லாத தொந்தரவையும், மன உளைச்சலையும் தந்துவிடும்.
பத்திரங்கள்: எனவே பத்திரங்களில் பிழைகள் ஏதாவது தென்பட்டால், தாமதிக்காமல் உடனே திருத்திவிட வேண்டும். பத்திரங்களில் பதிவு செய்யும், திருத்தங்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஒரே வழி தான் உள்ளது. அதுதான் "திருத்தல் பத்திரம்"
அதாவது, வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் விற்பனை பத்திரங்கள் மற்றும் தலைப்பு பத்திரங்கள் போன்ற ஆவணங்களில் உள்ள தவறுகளை சரிசெய்யக்கூடிய வழிவகைதான் திருத்த பத்திரம் எனப்படும்.. இதற்கு உறுதிப்படுத்தல் பத்திரம், துணை பத்திரம் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
விற்பனை: உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி கொடுத்த அதே நபரால் மட்டுமே, அந்த பிழையை திருத்த முடியும். அப்படி அவர் பிழையை திருத்த தயாராக இருந்தால் 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்கி சரிசெய்ய செய்ய வேண்டும்.
அதேபோல, நீங்கள் சொத்து வாங்கி பல வருடமாகி, அதில் வீடு கட்டி குடியிருந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. திடீரென அந்த சொத்தில் பிழைகள் உள்ளது தெரியவந்தால், உடனே பிழை திருத்திவிட வேண்டும். அதேபோல, உங்களுக்கு விற்பனை செய்திருந்த நபரும், பிழையை திருத்தி பத்திரம் பதிவு செய்துதர தயாராக இருக்க வேண்டும்.
சிக்கல்கள்: பத்திரப்பதிவு அலுவலகத்தில், 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்கி, அந்த பிழையை அவரை சரிசெய்ய சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், சொத்து விவரமும், நீங்கள் வாங்கும் பட்டாவும் ஒரே மாதிரி இருக்காது. பத்திரமும், பட்டாவும் நீங்கள் வாங்கி சொத்தின் அளவுடன் ஒத்துக்போகாது.. நாளடைவில் பிழைகளுடன் அந்த சொத்தினை வேறு யாருக்காவது விற்க முயன்றாலும் சிக்கலாகிவிடும். அல்லது இந்த பிழையை சுட்டிக்காட்டியே, விலைமதிப்பில்லாத உங்கள் சொத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கலாம்.
எனவே சொத்து பத்திரத்தில் தவறுகள் இருந்தால் அதனை சொத்தை எழுதிக்கொடுத்தவரை வைத்து திருத்திக்கொள்ளுங்கள். அசல் ஆவணங்களில் சிறிய தட்டச்சு அல்லது எழுத்துப்பிழை தொடர்பான மாற்றங்கள் ஏற்பட்டால், திருத்தம் பத்திரம் பதிவு செய்ய ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஆவணத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், அலுவலகம் அதிக முத்திரைக் கடமையை கோரவேண்டும்.
ஆவணங்கள்: இதில் முக்கியமாக, சொத்து விஸ்தீரணத்தின்(அளவு) வித்தியாசமாக இருந்தால், விஸ்தீரணத்தின் முத்திரைத் தீர்வையாக, தமிழக அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ள வழிகாட்டி மதிப்பீட்டின்படி (Guide Line Value) கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒருவேளை பல வருடம் கழித்து நீங்கள் பிழையை கண்டுபிடித்திருந்தால், தற்போதைய அரசு வழிகாட்டி மதிப்புக்கேற்றபடி முத்திரைத் தீர்வையை உரிய கட்டணத்துடன் செலுத்திவிட வேண்டும்.. அடையாளச் சான்று, முகவரி சான்று, புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் கையோடு கொண்டு செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications