ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணாமல் பிறருக்கு மாற்றலாமா? ரிசர்வ் செய்தும் பயணிக்க முடியலயா? இதை பாருங்க
சென்னை: ரெயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்த ஒருவர், எதிர்பாராத விதமாக அந்த தேதியில் பயணிக்க முடியவில்லையானால் அடுத்து என்ன செய்வது? அவருக்கு பதிலாக வேறு யாராவது அதே டிக்கெட்டில் பயணம் செய்ய முடியுமா? இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன தெரியுமா?
ரெயிலில் முன்பதிவு செய்த நபரால், திடீரென பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால், அந்த டிக்கெட்டை பலரும் கேன்சல் செய்துவிடுகிறார்கள்.. அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

டிக்கெட் ரத்து: ஆனால், டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கு பதிலாக, அவரின் ரத்த சொந்த பந்தங்கள், அந்த தேதியில் பயணிக்கலாம் என்ற ஆப்ஷனை வழங்கியிருக்கிறது இந்தியன் ரயில்வே.
முன்பதிவு டிக்கெட்டை இன்னொருவரின் பெயருக்கு எப்படி மாற்றுவது? என்பது குறித்து ஒருசில வழிமுறைகளை வகுத்துள்ளது ரெயில்வே துறை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதாவது:
ரத்த பந்தங்கள்: "ரெயிலில் முன்பதிவு செய்த நபரால் அதே தேதியில் பயணிக்க முடியாவிட்டால், அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அந்த தேதியில் பயணிக்கலாம்.. அதாவது ரிசர்வேஷன் செய்த நபரின் டிக்கெட்டில் பெயரை மாற்றி, அம்மா, அப்பா, தங்கை, தம்பி, அண்ணன், அக்காள், மனைவி, குழந்தை போன்ற ரத்த சொந்த உறவினரில் யாராவது ஒருவர் செல்லலாம்.
இதற்கு அன்றைய தினம் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, டிக்கெட் முன்பதிவு செய்த நபர், அந்த டிக்கெட்டுடன் ஏன் பயணம் செய்யவில்லை என்ற காரணத்தை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.. இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் கார்டு நகலையும் வழங்க வேண்டும். மேலும், தனக்கு பதிலாக பயணிப்பவர், தனக்கு என்ன வகையான ரத்த சொந்தம் என்பதையும், அந்த அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டு, உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் : அதாவது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.. இவை அனைத்தையும், டிக்கெட் முன்பதிவு கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும். அவரும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தபிறகு, உங்கள் டிக்கெட்டில் பெயரை மாற்றிக்கொடுப்பார்.
ஒருவேளை, பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல ரிசர்வ் செய்து, கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனால், 48 மணி நேரத்துக்கு முன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித்தரலாம். ஆனால், இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் தரப்பட வேண்டும்.
கோரிக்கை: திருமணம் உள்ளிட்ட வைபவ பயணம் ரத்தாகிவிட்டாலும், 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக்கொள்ள முடியும். இப்படி டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்த கட்டணமும் இல்லை. ரெயில் நிலையங்களிலுள்ள ரிசர்வேஷன் சென்டர்களில் மட்டுமே இப்படி பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications