திமுகவில் முக்கிய போஸ்டை அள்ளிய சத்யராஜ் மகள் திவ்யா.. ஐடி விங்! எப்படி இந்த பதவி வந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யா, கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்குவது என ஆலோசிக்கப்பட்டு வந்தது. மாவட்ட அளவில் பொறுப்பா? மாநில அளவில் பொறுப்பா? எனவும் விவாதிக்கப்பட்டது.
நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா, கடந்த வாரம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியில் இந்த இணைப்பு நடந்தது. அவர் இணைந்து சில நாட்கள் ஆன நிலையில், அவருக்கு இன்னும் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

முதலில் மாநில அளவில் முக்கிய பதவி வாங்கித் தருகிறேன் என்று சேகர்பாபு உத்தரவாதம் அளித்திருக்கிறார். குறிப்பாக, உதயநிதி மாநில செயலாளராக இருக்கும் இளைஞரணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதாம். இளைஞரணியில் பெண்களுக்கு எப்படி பதவி கிடைக்கும் என்று கேள்வி வந்ததாகவும், இளைஞரணியில் ஆண்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; பெண்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே என சொல்லப்பட்டதாம்.
அதனால், இளைஞரணியில் பொறுப்பு கிடைக்கும் என திவ்யா எதிர்பார்த்தாராம். ஆனால், உதயநிதி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது. அதனாலேயே அவருக்கு பதவி வழங்கப்படவில்லையாம். இந்த நிலையில், உதயநிதியை சந்திக்க அவரிடம் திவ்யாவிற்காக சேகர்பாபு நேரம் கேட்டுள்ளார். ஆனாலும் நேரம் ஒதுக்காமல் இருந்து வருகிறார் உதயநிதி. இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுகவின் எல்லை பகுதியில் தான் திவ்யா வசித்து வருகிறார்
இந்த நிலையில் மாநில அளவில் பொறுப்பு கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று முதல்வரிடம் சேகர்பாபு, சொல்லியிருக்கிறார். ஓ.கே. என முதல்வரும் ஒப்புதல் கொடுத்த நிலையில், என்ன பொறுப்பு என்றும் கடந்த 2 நாட்களாக அறிவாலயத்தில் ஆலோசனை நடந்திருக்கிறது.
இந்த நிலையில், திமுகவின் ஐ. டி.விங் அணியின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பு டாக்டர் திவ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை டாக்டர் திவ்யாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வாழ்த்துகள் பெறவிருக்கிறார் டாக்டர் திவ்யா.
பின்னணி:
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். சிபி சத்தியராஜின் மூத்த சகோதரி ஆவார். அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக திவ்யா பணியாற்றி வருகிறார்.
இந்த அமைப்பை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்ய திமுக உள்ளிட்ட சில கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சாராரின் உணவு முறையை பள்ளிகளில் திணிக்க அவர்கள் முயல்வதாக புகார்களும் வைக்கப்பட்டன. (ஆனால் இந்த புகார்கள் நிரூபிக்கப்படவில்லை) இப்போது அதே திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் திவ்யா சத்யராஜ் தொடங்கினார். இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு உதவக்கூடிய அமைப்பு ஆகும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்குவதற்காக இந்த அமைப்பை திவ்யா சத்யராஜ் தொடங்கினார். 2016ல் இவர் வீகன் உணவு பழக்கத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் திமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகள் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திவ்யா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பற்றிய முதுகலை தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை அமர்வுகள் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துவது வழக்கம்.
மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகள் மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருந்ததும் கூட குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications