"மரணம் எனும் தூது வந்தது" மறைந்தாலும் "அழியாத" கவிஞர்.. நாத்திகர் கண்ணதாசன் ஆத்திகரானது எப்படி?
சென்னை: நாத்திகராக இருந்த கண்ணதாசன் எப்படி ஆத்திகரானார் என்பது குறித்து தனது பழைய பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
காதல், ஊடல், கோபம், அமைதி, துக்கம், ஜாலி, மெலடி, தத்துவம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கு பாட்டு எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இவர் 1927ஆம் ஆண்டு பிறந்தார். இது வரை 5000 பாடல்களை எழுதியுள்ளார்.

அது போல் 6000 கவிதைகள் 232 புத்தகங்களை படைத்துள்ளார். பாரதிக்கு பிறகு சிறந்த நவீன தமிழ் புலவராக கண்ணதாசன் கருதப்பட்டதால் அவர் கவிஞர் என்ற அடைமொழியுடன் அடைக்கப்படுகிறார். இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியுள்ளார்.
அது போல் சேரமான் காதலி என்ற நாவலை எழுதியதால் அவருக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது இயற்பெயர் முத்தையா. இவர் நாத்திகர். ஆயினும் ஆண்டாளின் திருப்பாவை மீது பற்று கொண்டவர். பகவான் கிருஷ்ணன் மீதுள்ள ஈடுபாட்டால் தனது பெயரை கண்ணதாசன் (கண்ணன்) என மாற்றிக் கொண்டார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெயசங்கர், ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் மூன்றாம் பிறை படத்தில் இருந்து கண்ணே கலைமானே பாடல்தான். இவரது வீடு தி.நகரில் இருந்தது. அங்கு பல தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் வெளியே வரிசையாக நிற்கும்.
எந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பாடல் எழுத வேண்டும் என கண்ணதாசன் நினைக்கிறாரோ அந்த காரில் ஏறி அவர் செல்வாராம். மற்றவர்கள் எல்லாம் அங்கிருந்து சென்றுவிட்டு அடுத்த நாள் மீண்டும் அதே போல் காருடன் காத்திருப்பார்களாம். கண்ணதாசன் அரசியல், தத்துவம், வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளில் மாறி மாறி பயணித்தவர்.
ஆண்டாள், கண்ணன் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் கண்ணதாசன் திராவிடக் கொள்கைகளில் அதிக பற்றுக் கொண்டிருந்தாராம். இதனால் இவரை நாத்திகர் என்றே பலரும் விவரித்தனராம். இந்த நிலையில் அவர் ஆத்திகராகவும் மாறினாராம். அது எப்படி என்பது குறித்து ரஜினிகாந்த் ஒரு மேடையில் கூறியிருந்தார்.
அதாவது ஒரு முறை கம்பராமாயணத்தை எரிக்கும் போராட்டத்தை நாத்திகர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தினராம். அப்போது கண்ணதாசனிடம் எரிப்பதற்காக அந்த புத்தகம் கொடுக்கப்பட்டது. புலவரான கண்ணதாசன், புத்தகத்தை எரிப்பது என முடிவாகிவிட்டது, அதை படித்துவிட்டுதான் எரித்தால் என்ன என நினைத்தாராம் கவிஞர்.
உடனே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கியவர். கீழே வைக்காமல் படித்துக் கொண்டே இருந்தாராம். அவர் போதும் என நினைத்தாலும் அந்த புத்தகம் அவரை படிக்கத் தூண்டிக் கொண்டே இருந்ததாம். இதையடுத்து படித்து முடித்ததும் இத்தனை அருமையான இதிகாசமா என அந்த புத்தகத்தை வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாராம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
பொதுவாக ரஜினிகாந்த் யார் காலிலும் அவ்வளவு எளிதில் விழுந்துவிட மாட்டார். ஆனால் கண்ணதாசன் காலில் விழுந்து வணங்கியதிலிருந்து அவர் மீது ரஜினிக்கு எத்தனை பாசம், மரியாதை இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ரஜினி குறித்து பேசும் போதெல்லாம் இந்த புகைப்படம் வைரலாகிக் கொண்டே இருக்கும். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தனது எழுத்துகளால் வசீகரம் செய்திருந்தார் கவிஞர். பின்னர் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் "மரணம் எனும் தூது வந்தது"! அவர் மறைந்தாலும் அவருடைய பாடல்கள் என்றும் அழியாமல் இருக்கும்.












Click it and Unblock the Notifications