அசத்தல்.. முதல்வர் ஸ்டாலின் ஒன்றரை ஆண்டு ஆட்சியில் இத்தனை திட்டங்களா? சத்தமில்லாத சாதனை லிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராகப் பதவியேற்ற அன்று முதல் மாற்றத்தைத் தனது பெயரிலிருந்து தொடங்கினார் ஸ்டாலின். அதற்கு முன்பு வரை உலகம் முழுவதும் இருந்த தமிழர்கள் அவரை மு.க.ஸ்டாலின் என்றே அறிந்து வைத்திருந்தனர்.
ஆனால், 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று உச்சரித்தார். இந்தப் பெயர் உச்சரிப்பே எதிர்க்கட்சியினர் பலரை உற்றுப் பார்க்கவைத்தது. அதேபோல் அவரது கட்சியினரும் அதுவரை இல்லாத உற்சாகத்தைப் பெற்றனர்.

முதல்வராகப் பதவியேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் எந்தக் கோப்பில் தனது முதல் கையெழுத்தைப் போடப்போகிறார் எனப் பரவலான எதிர்பார்ப்பு எழுந்தது. அந்தநேரத்தில் பல கருத்துகள் முட்டி மோதின. அப்போதும் அதில் தனது தனித்துவத்தைப் பதிய வைத்தார் ஸ்டாலின்.
பதவியேற்ற அன்று 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,57,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
கொரோனா அச்சுறுத்தலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த மக்களுக்கு அந்த அறிவிப்பு இனிப்பான செய்தியாக அமைந்தது.

இரண்டாவது உத்தரவாக ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய ஆணைப் பிறப்பித்தார். அந்தச் செய்தி தாய்மார்கள் மனதில் பால்வார்க்கும்படி அமைந்தது.
அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள் என அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இலவசமாகப் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கடந்த ஒன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்திவாய்ந்த திட்டமாக விளங்கிவருகிறது.
நான்காவதாக, திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே பல மாவட்டங்களின் மக்கள் குறைகளைக் கேட்பதற்காகவும், அதை ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றுவதற்காகவும் திட்டம் வகுத்து மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று வந்தார்.

அதன் ஒரு பகுதியாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாட்களுக்குள் மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கினார். அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஸ்டாலின் ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலன்பெறும் வகையில், ஐந்தாவதாக வந்தது ஒரு சிறப்பான உத்தரவு. கொரோனா நோயாளிகளின் மருத்துவமனை கட்டணத்தைத் தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்கும் என்று ஆணையிட்டார். ஐந்து வகையாகத் தமிழ் நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைப் போலத் தனது முதல் கையெழுத்தின் மூலம் 5 திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்தார் ஸ்டாலின்.
இந்தத் திட்டங்களைப் போலவே தனது ஆட்சிக் காலத்திற்கு முன்கூட்டியே ஒரு பெயரை முடிவுசெய்து அறிவித்தார் ஸ்டாலின். அவர் அறிவித்த 'திராவிட மாடல்' ஆட்சி என்ற சொல் இந்திய அளவில் அரசியல் வட்டாரங்களில் ஒரு அதிர்வை உண்டாகியது. தனது முதல் கையெழுத்து மூலம் 5 முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி முதல்வர் ஸ்டாலின், விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் தரும் என்பதைச் செயல்படுத்திக்காட்டினார்.

மூன்றாம் பாலின (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுகத்தைச் சேர்ந்தவர்களை எவ்வாறு அழைக்கவேண்டும்? எந்த மாதிரியான சொற்களை ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஒழுங்குமுறையை நெறிப்படுத்துவதற்காகத் தமிழ்ச் சொல் அகராதி ஒன்றை அரசாணையாக வெளியிட்டு பெருமை சேர்த்தார். திராவிட இயக்கம் ஆட்சிப் பொறுப்பில் வந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததின் அடையாளமாகப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தார். அதற்காகத் தனி சமையல் மையங்களை அமைத்து, சத்தான தானிய வகைகளுடன் கூடிய உணவைப் பிள்ளைகள் பசியாறப் பரிமாறினார்.
இத்திட்டத்தைப் புகழாத தாய்மார்களே தமிழ்நாட்டில் இல்லை எனக் கூறும் அளவுக்கு இது வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இன்றைக்குப் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் பேருந்தைத் தமிழக மக்கள் 'ஸ்டாலின் பஸ்' என்று அடைமொழிப் போட்டு அழைக்கும் அளவுக்குக் கடைக்கோடி மக்கள் வரை போய்ச் சேர்ந்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு எனக் கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், மு.கருணாநிதி அறிமுகப் படுத்திய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தினை காலத்தின் தேவைக்கு ஏற்ப பெண்களுக்கான உயர்கல்வி திட்டமாக மாற்றி அமைத்தார்.

அதன் நவீன வடிவமாக 'புதுமைப் பெண்' திட்டத்தினை செயல்படுத்தினார். இதன் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் சேர மாதம் 1000 ரூபாய் வழங்கிட ஆணை பிறப்பித்தார். அதன் மூலம் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். மேலும் வரும் காலங்களில் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தைச் சீராக்கும் 'சிற்பி' ஒரு பகுதியாகத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. Students in Responsible Police Initiatives என்பதன் சுருக்கம் தான் Sirpi. இப்படி எண்ணும் எழுத்து, நான் முதல்வன் என வரிசைக் கட்டின பல திட்டங்கள். கல்வி, ஒழுக்கம் இவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமா? வேலைவாய்ப்பு எனச் சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கு விடை கண்டுள்ளது திமுக அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்குப் பணி ஆணை நேரடியாக வழங்கியுள்ளார் ஸ்டாலின்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரி செய்வதற்காக வேண்டி 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் அறிமுகம் செய்தார். அத்திட்டத்தை கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழு பெரிதும் பாராட்டி உள்ளது. வகுப்பறைக்குள் குட்டி விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் 'வானவில் மன்றம்' திட்டம் ஒன்றும் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படி இந்தியாவே திரும்பிப் பார்க்கும் படியான ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்துள்ளார். மேலும் அதிரடி திட்டங்கள் மலைபோல் குவிந்தன. போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் பத்திரப் பதிவை மோசடியை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் சட்டத்திருத்தமாக இது மாறியது. சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றம் இச்சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்ததற்காகத் தமிழக அரசைப் பாராட்டியது.
இந்த ஆட்சியில் உரியக் காலத்தில் மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்டதன் மூலம் முன்பைவிட அதிகப்படியான நிலங்கள் பாசன வசதியைப் பெற்றன. அதன்மூலம் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் 2021 முதல் 2022 வரையான ஆண்டில் மட்டும் 22,05,470 ஹெக்டேரில் 1,22,22,463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தியைப் பெருக்கிக் காட்டினார். இந்தச் சாதனை வேளாண் மக்களிடையே பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக மாறியது.
மேலும் ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட்டை திமுக அரசு போட்டது. இதனால் வேளாண்மைக்கு என்று ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வேளாண்துறையோடு நேரடியாகத் தொடர்புடைய துறையை மின்சாரத்துறை. இலவச மின் இணைப்பு வழங்கியதன் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டியா தமிழ்நாடுதான் விளங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஒன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் மட்டும் 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கி 50 ஆண்டுக்கால தமிழக வரலாற்றில் இல்லாத சாதனையைச் செய்து காட்டியுள்ளார் ஸ்டாலின்.
தமிழையும் திமுகவையும் பிரிக்கமுடியாது. தமிழ்ப் பண்பாட்டு அடையாளங் களை முன்வைத்தே திமுக கடந்தகால வரலாற்றில் வளர்ந்துவந்துள்ளது. ஆகவே வேறு கட்சிகளைவிட இத்துறையை முழுமையாக வளர்க்கும் நோக்கில் பல திட்டங்கள் அண்ணா தொடங்கி ஸ்டாலின் வரை செய்து வருகின்றன.
முதன்முறையாக இந்தியாவைத் தாண்டி, இலண்டனில் தமிழ்நாட்டின் முகமாக முன்வைக்கப்படும் பென்னி குவிக் சிலையை ஸ்டாலின் நிறுவிக்காட்டி இருக்கிறார். தமிழை உலக அளவில் கொண்டுபோய் சேர்க்க 'தமிழ்ப் பரப்புரைக் கழகம்' என்ற அமைப்பை உருவாகிக் காட்டியுள்ளார். இதன் மூலம் 24 நாடுகள், 120 மையங்களில் தமிழ் மொழிக் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த தமிழ் வரலாற்றுப் புதையல்களை ஆவணப்படுத்த வேண்டி அருங்காட்சியகம் ஒன்றை 11 கோடிக்கு மேல் செலவிட்டு உருவாகித் தந்துள்ளார். சோழர்களின் வரலாற்றை வெளியே கொண்டுவரும் விதமாக 'சோழகேரளன் திருமாளிகையைக் கண்டறிவதற்காக அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வழி உருவாக்கித் தந்துள்ளார். தமிழ்மொழியைச் சிறப்பிக்கச் சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை முதன்முதலாக நடத்திக்காட்டினார். மேலும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற 16 எழுத்தாளர்களுக்கு ரூ 1.5 கோடி மதிப்பிலான வீடுகளை வழங்கி, தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத இமாலய சாதனையைச் சத்தமே இல்லாமல் செய்து முடித்துள்ளார்.
தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக உள்ள இலங்கை அகதிகள் முகாமை ''இலங்கை மறுவாழ்வு முகாம்'என்று பெயர் மாற்றி உத்தரவிட்ட ஸ்டாலின், அதற்காக 317 கோடியை ஒதுக்கினார். மேற்கொண்டு திண்டுகள் மாவட்டத்தில் உள்ள அகதிகளுக்குத் தரமான 321 சிமெண்ட் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். கலாச்சாரத்தைக் காப்பாற்றினால் போதுமா? தொழில்நுட்பத்தின் முன்னேற வேண்டாமா? என யோசித்து மதுரையில் 600 கோடியில் டைடல் பார்க் உருவாக்க ஆணையிட்டுள்ளார். அதேபோல் வேலூரில் ஐடி பார்க் உருவாக்கவும் அதன்மூலம் 3,300 பேருக்கு வேலை கிடைக்கவும் வாழ்வாதாரத்தை உறுதிசெய்து காட்டியுள்ளார். ஓலா 7,614 முதலீடு, 3500 கோடி மின் வாகன தொழிற்சாலை என புதிய நிறுவனங்களை உருவாக்கியதால் ஸ்டாலின் ஆட்சியில் தொழில்துறையில் முன்னேறி வருகிறது தமிழ்நாடு.

இவை மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்திலும் மாற்றம் கட்டுள்ளது இந்த ஆட்சி. தமிழக அரசு நிர்வாகத்தைக் கோட்டையில் அமர்ந்தபடியே இருந்து சகலத் தரவுகளையும் விரல்நுனியில் எடுக்கும் விதத்தில் 'டேஷ் போர்டு' என்ற ஒரு எண்ம தகவல்பலகையை உருவாக்கி உள்ளார். நாடு வளம் மட்டும் முக்கியமல்ல; காடு வளமும் முக்கியம் என இயக்கி வரும் திமுக அரசு கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் வாழ்ந்துவரும் தேவாங்கு விலங்கினத்திற்கு என்று சரணாயலத்தை அறிவித்துள்ளது. மேலும் மதுரை நகரத்தின் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் பகுதியை 'உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி'யாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனையடுத்து 'காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலய'த்தை அறிவித்தது. காலநிலை மாற்றத்திலிருந்து பூமியைக் காப்பாற்றுவதற்காக 'க்ரீன் க்ளைமேட் கம்பெனி'யை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இதற்காக ரூ.1000 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கு முதற்கட்டமாக ரூ 100 கோடியை ஒதுக்கியுள்ளார். மருத்துவத்துறையை பொறுத்தளவில் கொரோனாவுக்குப் பின் அறிமுகம் செய்யப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதுவரை 98 லட்சத்தில் 92 ஆயிரத்து 456 பேர் இதனால் பயன்பெற்றுள்ளனர்.
திமுக ஆட்சி என்றால் அது ஆன்மிகத்திற்கு எதிரானது எனப் பலர் விஷம பிரச்சாரம் செய்த நிலையில் இந்த ஆட்சியில் மட்டும் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவை விமர்சையாகக் கொண்டாடிய திமுக அரசு வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கவும் உத்தரவு இட்டுள்ளது. இப்படித் துறைதோறும் இந்தப் புதிய ஆட்சி தூர்வாரிய புதிய திட்டங்களை அடுக்கடுக்காக அறிமுகம் செய்து வருகிறது.











Click it and Unblock the Notifications