Its an emergency! வெடிகுண்டு மிரட்டலை சொல்லாமல் மைக்கில் மாணவர்களை எச்சரித்த பள்ளி நிர்வாகத்தினர்
சென்னை:அவசரம் அனைவரும் மைதானத்திற்கு உடனே வாருங்கள் என மைக்குகளில் பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
சென்னையில் 13-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலை மர்ம நபர் கொடுத்திருந்தார். தொலைபேசிக்கு போன் செய்யாமல் இமெயில் முகவரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகள் அனைத்துமே பல்வேறு கிளைகளை கொண்டவை. இவை பிரபலமான பள்ளிகளும் கூட! இந்த பள்ளிகளில் பல்வேறு அரசியல்வாதிகளின் பிள்ளைகள், சின்னத்திரை பிரபலங்களின் பிள்ளைகள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காலை 10.40 மணிக்கு இந்த மெயில் வந்துள்ளது. அதில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறுவதற்குள் குழந்தைகளையும் மாணவர்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் இந்த மெயிலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து போலீஸாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் வகுப்பறைகளில் இருந்த மாணவர்களை மைதானத்திற்கு மைக் மூலம் அழைத்து வரவழைத்தனர். பள்ளிகளுக்கு யாரேனும் புதுநபர்கள் வந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவர்களின் புத்தகப்பை, சாப்பாட்டு பைகளையும் பள்ளிகளிலேயே வைத்துவிட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளில் தேடிய நிலையில் வெடிகுண்டு மிரட்டலானது புரளி என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவர்கள் சிலர் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், நாளை எங்களுக்கு கண்காட்சி இருக்கிறது. அதற்காக நாங்கள் அந்த பணிகளில் சந்தோஷமாக பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
அப்போது மைக்கில் Emergency என அறிவித்து வகுப்புகளை விட்டு வெளியே வருமாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இதையடுத்து நாங்கள் வந்தோம். வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடித்துள்ளார்கள். இப்படி எதற்காக பொய் சொல்ல வேண்டும். இவர்களை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications