வயிறு முட்ட பலகாரங்கள் சாப்பிட்டு ஜீரணமாகவில்லையா? தீபாவளி லேகியம் இருக்கே! வீட்டிலேயே செய்யலாம்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு நாம் சாப்பிடும் பலகாரங்கள் பெரும்பாலானவை எண்ணெய், நெய், வெண்ணெய் உள்ளிட்டவைகளால் செய்யப்படுபவை என்பதால் அது எளிதில் ஜீரணமாக தென் தமிழகம், டெல்டா பகுதிகளில் தீபாவளி லேகியம் என செய்வதுண்டு.
இந்த லேகியம் தெற்கத்திக்காரர்கள் செய்வார்கள் என சொல்வதுண்டு. கும்பகோணம், தஞ்சாவூர்காரர்களுக்கும் இந்த வழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த லேகியத்தை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு, தேன்குழல், லட்டு, தட்டை, மிக்ஸர், சோமாஸ், ரவா லட்டு, குலாப் ஜாமுன் உள்ளிட்டவைகளை சாப்பிடுவோம். இவை எல்லாம் வெல்லம், சர்க்கரை உள்ளிட்டவைகளால் ஆனது.
இந்த லேகியத்தை செய்யத் தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்- 10 மில்லி
தனியா விதை- 20 கிராம்
மிளகு- 10 கிராம்
சீரகம்- 10 கிராம்
ஓமம்- 10 கிராம்
சுக்கு-ஒரு சிறிய துண்டு
பனைவெல்லம்- 200 கிராம்
அதிமதுரம்- ஒரு சிறிய துண்டு
சித்தரத்தை - சிறிதளவு
கண்டந்திப்பிலி- சிறிதளவு
அரிசி திப்பிலி- சிறிதளவு
நெய் 20 கிராம்
தேன் - அரை டீஸ்பூன்
விரலி மஞ்சள் ஒரு துண்டு
தேன், எண்ணெய், நெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் மிதமான தீயில் வைத்து வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் பனை வெல்லத்தை நசுக்கி போட்டு ஒரு கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, அதை வடிகட்டி கொள்ளவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து பாகு வரும் வரை கொதிக்கவிடவும்., பிறகு பொடித்தவைகளை போட்டு நன்கு கிளறவும். நல்லெண்ணெய், நெய் ஊற்ற வேண்டும். அவை கெட்டி ஆகி அல்வா போல் வந்ததும் தேன் சேர்த்து கிளறவும். இதிலிருந்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து தீபாவளிக்கு உண்ணலாம். இது வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும்.












Click it and Unblock the Notifications