பாம்புகள் கூடு கட்டி வாழுமா? எந்த இனம் வீடு கட்டி வாழும்?
சென்னை: பாம்புகள் கூடுகட்டி வாழுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம். பொதுவாக பாம்புகள் கூடுகட்டி அதில் வாழும் உயிரினம் அல்ல!
இதுகுறித்து நமசிவாய் மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: பாம்புகள் பெரும்பாலும் கைவிடப்பட்ட கரையான் புற்றுகள், மரப்பொந்துகள், மரப்பட்டைகளின் பிளவுகள், பாறைகளின் பிளவுகள், நிலத்தில் தரையில் உள்ள பொந்துகள், புதர்கள், மரக்கிளைகள் ஆகியவற்றையே தனது இருப்பிடமாக்கி அவற்றுள் வசிக்கக் கூடியவை.

தண்ணீர் பாம்புகள் தண்ணீரில் வசித்தாலும் அவைகளும் அவ்வப்போது அருகிலுள்ள தரைப் பகுதியில் வந்து தங்குகின்றன.
ஆனால், இராஜநாகம் மட்டுமே இதற்கு விதிவிலக்கானது. சுமார் 16 அடி நீளம் வரை வளரும் இது அதிகமாக அளவு நஞ்சை தன் நஞ்சுப்பையில் தேக்கி வைத்திருக்கும் விஷப்பாம்பினமாகும். இந்தியாவில் இது மேற்கு தொடர்ச்சி மலை, வட இந்திய மலைக்காடுகள், அஸ்ஸாம், கோவா , அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சுமார் 6000 அடி உயரமுள்ள மழைக் காடுகளிலும், தேயிலை எஸ்டேட்களிலும் காணப்படுகிறது.

பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளிலும் இது காணப்படுகிறது. பெண் இராஜநாகம் இணை சேர்ந்த பின்னர் முட்டையிடும் காலத்தில் அடர்ந்த மூங்கில் காடுகளில் வந்து தனது வாலினால் காய்ந்த இலைகளை கூட்டி சுமார் ஒரு அடிக்கும் உயரமான கூம்பு வடிவ கூடு அமைக்கும். இதனடியில் சுமார் 30 முட்டைகள் வரை இட்டு, மேற்பகுதியில் இரண்டு மாதங்கள் வரை இரை ஏதுமில்லாமல் தங்கி இருந்து தனது முட்டைகளை அடைகாக்கும்.

முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளிவந்ததும் பெண்பாம்பு அதனை விட்டு அகன்று விடும். உலகின் கூடுகட்டி வாழும் ஒரேயொரு பாம்பு இனம் இராஜநாகம் மட்டுமே ! இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications