ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? தெற்கு ஒடிஷா மாவட்டங்கள் அத்தனையும் ’சென்னை மாகாணத்தின்’ பகுதிகள் தெரியுமா?
சென்னை: ஒடிஷாவை ஒரு தமிழர் ஆட்சி செய்யவிடலாமா? ஒடிஷாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா? என ஒடிஷா சட்டசபை தேர்தல் களத்தில் இடைவிடாமல் கூச்சலிடும் பாஜக தலைவர்களுக்கு ஒடிஷாவின் மாவட்டங்கள் ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த வரலாறு தெரியுமா? என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றாக ஒடிஷா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுடன் பல்வேறு வகைகளில் மிக நெருக்கமானது ஒடிஷாதான். எல்லைகளால் மட்டுமல்ல.. மக்களாலும் நெருக்கமானது ஒடிஷாதான்.

நாடு விடுதலை அடைந்த போது மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத நிலையில் மாகாணங்கள் இருந்தன. அப்போதைய சென்னை மாகாணம் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து அண்டை மாநிலங்களின் பெரும் நிலப்பரப்பு சென்னை மாகாணத்தில்தான் இருந்தன. வடகேரளாவின் மலபார் பிராந்தியமும் லட்சத்தீவுகள் நிலமும் சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தன. இன்றைக்கும் ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தில் பயணித்தால் 1950-களில் சென்னை மாகாணத்தின் ஒரு அங்கமாக இருந்த பெயர் பலகைகளைப் பார்க்க முடியும். ஆம் ஒடிஷாவின் தென் பகுதி மாவட்டங்கள் பெரும்பாலானவை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்தன.

அதாவது ஒடிஷாவின் தெற்கு பதியில் உள்ள ஆந்திராவை ஒட்டிய கஞ்சம், கஜபதி, ராயபடா, கோரபுட், மல்காங்கிரி மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தவைதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின்னரே இன்றைய ஒடிஷாவுக்கு சொந்தமானவை இந்த நிலப் பகுதி.
அவ்வளவு ஏன்? தென் பகுதி ஒடிஷா மாவட்டங்களில் பெரும்பாலானோர் பூர்வகுடிகள். ராயகடா, கோரபுட், மல்காங்கிரி மலைகளில் ஆந்திரா எல்லையுடன் பெரும் எண்ணிக்கையில் ஆதி பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கோண்டுகள், கொதவாக்கள் என பல்வேறு பிரிவினராக இருக்கின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்றால் பேசும் மொழியானது பழந் தமிழை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பேசுவது ஒரியா மொழி அல்ல. இந்த பழங்குடிகள் பேசுவதை உற்று கேட்டாலே அதன் மொழி புரியும். இந்த பழங்குடிகளின் ஊர் பெயர்களை கவனித்து பார்த்தாலே கார்குழலி தொடங்கி அருந்தமிழில் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படை வரலாறு தெரியாமல்தான் சிலர், அய்யோ ஒடிஷாவை தமிழர் ஆட்சி செய்வதா? என ஓலமிட்டு அலறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications