திமுகவில் பெண் மாவட்டச் செயலாளர்கள் வரலாறு தெரியுமா? அதிமுக டூ லேட்! இது தான் ஃபிளாஷ்பேக்!
சென்னை: அதிமுகவில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா என்பவரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில், அக்கட்சியினர் இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என்றும், முதல் பெண் மாவட்டச் செயலாளர் எனவும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு கட்சித் தலைமையை கொண்டாடி வருகின்றனர்.
திமுக எப்போதோ செய்த காரியத்தை அதிமுக இப்போது தான் செய்திருக்கிறது. ஆம், திமுகவில் பெண் மாவட்டச் செயலாளர்கள் பலர் பவர்ஃபுல்லாக இருந்துள்ளனர். தில்லாக அதிமுக மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து அரசியல் செய்திருக்கின்றனர்.

வாசுகி முருகேசன்: அதில் முதலாவது இடத்தில் இருந்தவர் கரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்து வாசுகி முருகேசன். செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்த போது அவரை நேருக்கு நேர் எதிர்த்து தடாலடியாக அரசியல் செய்தவர். மிகவும் போல்டாக கட்சிப்பணிகள் ஆற்றியவர். இன்று உயிரோடு இருந்திருந்தால் திமுகவில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்திருப்பார். கரூரிலிருந்து கோவை செல்லும் வழியில் சூலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
விஜயலட்சுமி பழனிசாமி: அடுத்ததாக கோவை மாவட்ட திமுக செயலாளராக சிறிது காலம் மட்டும் இருந்தவர் விஜயலட்சுமி பழனிசாமி. இவர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மனைவி ஆவார். இவரும் துணிச்சலாக அதிமுக நிர்வாகிகளை எதிர்த்து கோவையில் அரசியல் செய்தார். எதிர்பாராத விதமாக கோவையிலிருந்து கரூர் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி இவரும் உயிரிழந்தார். இவரை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் இவர் தான் திமுகவின் முதல் பெண் மாவட்டச் செயலாளர் ஆவார்.
அங்கயற்கண்ணி: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அங்கயற்கண்ணி இருந்தார். இப்போது அவர் திமுக மகளிர் அணி மாநில துணைச் செயலாளராக புரோமோஷன் ஆகி சென்றுவிட்டார். இவரது திறமைகளையும், தைரியத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தளவுக்கு வரிந்துக் கட்டிக்கொண்டு ஆண் நிர்வாகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கட்சிப் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்தார்.
கீதாஜீவன்: சமூக நலத்துறை அமைச்சராக உள்ள கீதாஜீவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். இவர் அவரது தந்தை மறைந்த பெரியசாமி பாணியில் தடாலடி அரசியல் செய்யக்கூடியவர்.
இப்படி திமுகவில் பெண் மாவட்டச் செயலாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நியமனம் செய்யப்பட்ட நிலையில், அதிமுக இப்போது தான் பெண் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications