லோயர் பர்த் இனி இவங்களுக்குத்தான்.. ஆமா, ரயிலில் மொபைல் சார்ஜ் போடலாமா? இந்தியன் ரயில்வே சொல்வதென்ன?
சென்னை: ரயில்வேயில் லோயர் பர்த்தில் முன்னுரிமை யாருக்கு தெரியுமா? ரயிலில் செல்போன் சார்ஜ் செய்து கொள்ளலாமா?
இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை, நாட்டிலேயே மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும்.. நாளுக்கு நாள் ரயில் சேவைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதனால்தான், பயணிகளின் நலன்கருதி, ரயில்வேயில் புது புது சலுகைகளும், விதவிதமான அறிவிப்புகளும் வந்தவண்ணம் உள்ளன..

அந்தவகையில் சமீபத்தில்கூட, லோயர் பர்த் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது.. வழக்கமாக ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள், முதல் தேர்வாக லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த்தைதான் தேர்வு செய்வார்கள்..
ரிசர்வேஷன்: காரணம், ஜன்னலோரத்தில் சீட் இருப்பதோடு, அடிக்கடி ஏறி, இறங்குவதற்கும் வசதியாக இருக்கும் என்பதால், ரிசர்வ் செய்யும்போதே, இவைகளை தேர்வு செய்வார்கள்.
அதேபோல, இந்த டிக்கெட் முன்பதிவின்போது, வயதை கொண்டே பர்த்களும் ஒதுக்கப்படுகின்றன.. சமீபத்தில், ரயில்களில் லோயர் பர்த்துகள் யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை இந்திய ரயில்வே வெளியிட்டிருந்தது. அதாவது, ரயில்களில் லோயர் பெர்த் கேட்டு முன்பதிவு செய்யும் அனைவருக்குமே அது கிடைக்காது என்றும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே புதிய விதிகளை விதித்திருக்கிறது.
சலுகைகள்: அதில், மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் கிடைக்கும்... மாற்றுத்திறனாளிகளுக்கு 4 இருக்கைகள் உள்ளன. 2 லோயர் பெர்த், 2 மிடில் பெர்த். இந்த இருக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றவர்கள் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம்
அதேபோல, கரீப் ரத் ரயிலில் 2 லோயர் பர்த்களும் இரு அப்பர் பெர்த்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதேபோல, கர்ப்பிணிகளும் இந்த கீழ் பெர்த்தை பெற்றுக்கொள்கிறார்கள். வயதானவர்களுக்கும் லோயர் பர்த் தானாகவே ஒதுக்கப்படும். ஒருவேளை இவர்களுக்கு லோயர் பர்த் கிடைக்காவிட்டாலும், முன்னுரிமை தந்து, இவர்களுக்கு லோயர் பர்த் ஒதுக்குவது டிடிஆரின் கடமையாகும்.
மதுபானம்: அதேபோல, மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு தரப்பட்டுள்ளது.. எனினும். ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை கொண்டு சென்றாலோ, அது சட்டப்படி குற்றமாகும்.. அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தால், அவரிடமிருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும். குடிபோதையில் பயணம் செய்பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
மதுபானம் போலவே ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு சென்றால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.. இந்த தடை செய்யப்பட்ட பொருளால், ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதற்கும் சேர்த்தே இழப்பீடு கட்ட வேண்டும்.
அதேபோல, ரயில்வே சட்டப்படி, ரயிலுக்குள் எளிதாக தீ பிடிக்கும் பொருட்களான எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், ஈரமான தோல்கள், உலர்ந்த புல், இலைகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அரிக்கும் அமிலப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது. அப்படி எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 1989-ன் படி, பிரிவு 67, 164, 165 ஆகிய பிரிவுகளின் அதுவும் தண்டனைக்குரிய சட்டமாகும்.
செல்போன் சார்ஜர்: இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. காரணம், சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் அப்படியே தூங்கிவிடுகிறார்களாம். இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே இப்படியொரு தடையை ரயில்வே கொண்டுவந்திருக்கிறது.
பறிமுதல்: அதேபோல, ரயிலில் பட்டாசு கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது. பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வுகளையும் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.. பயணிகள் பட்டாசுகளை ரயில்களில் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications