சென்னையில் முக்கியமான பகுதி.. தண்டவாளம் இருக்கு, ஸ்டேசனும் இருக்கு, ஆனால் ரயில் மட்டும் வரவே வராது?
சென்னை : சென்னையின் முக்கியமான பகுதியான அண்ணா நகர் மேற்கு மற்றும் பாடி பகுதியில் ரயில் தண்டவாளம் இருக்கிறது. ஸ்டேசனும் இருக்கிறது. ஆனால் ரயில்கள் மட்டும் இயங்குவது இல்லை. இந்நிலையில் அந்த பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி புறநகர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி பாடி, அண்ணாநகர் மேற்கு ஆகிய 2 ரயில்நிலையங்களையும் மூடிவிட்டது தெற்கு ரயில்வே. வில்லிவாக்கம், பாடி, அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதி மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதற்காக போடப்பட்ட ரயில்வே வழித்தடமும் , இரண்டு ரயில் நிலையங்களும் கடந்த2007-ம் ஆண்டு மூடப்பட்டன. 2004ம் ஆண்டு தான் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக அண்ணாநகர் மேற்கு வரை, நாள் ஒன்றுக்கு 5 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. அந்த வழித்தடத்தை அப்படியே கோயம்பேடு வரை நீடித்திருந்தால் நிச்சயம் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். ஆனால் வெறும் பாடி வரை மட்டுமே நீட்டிக்கப்பட்ட அந்த ரயில் வழித்தடம் வெறும் நான்கு ஆண்டுகளில் மூடப்பட்டது.
பாடி மேம்பாலம் கட்டுவதற்காக மூடப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தை 2011ல் மீண்டும் தொடர மக்கள் எவ்வளவோ கோரிக்கை வைத்து முயற்சித்தார்கள். ஆனால் தெற்கு ரயில்வே அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதற்கு சொன்ன காரணம் லாபகரமானதாக இல்லை என்பது தான்.
தற்போதைய நிலையில் அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை செய்வதற்கும், உதிரி பாகங்களை கொண்டு செல்வதற்கும் அந்த தண்டவாளங்களை ஐ.சி.எஃப். பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு நிலையங்களை மூடி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வில்லிவாக்கத்தில் இருந்து பாடி, அண்ணாநகருக்கு ரயில் வசதிகள் கிடைக்காமல் போனது.

தற்போது பாடியில் சிட்கோ நகர், சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளும், அண்ணாநகரில் திருநகர், அகஸ்தியநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் வசதி என்பது இல்லை. இப்போது புறநகர் ரயில்களை இயக்கினால் வில்லிவாக்கம், பாடி, அண்ணாநகர் சிட்கோ பகுதியில் உள்ள பல லட்சம் மக்கள் வசிக்கும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆனால் ரயில்வே அதிகாரிகளோ வில்லிவாக்கம்- அண்ணாநகர் இடையே ஒருநாள் ரயில் சேவைக்கு ரூ.30 ஆயிரம் செலவானது என்றும் ஆனால் மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் மட்டும் வருவாய் கிடைத்தது என்று கூறியதுடன் பாடி, அண்ணாநகர் மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். தற்போதைய நிலையில் ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்படும் பெட்டிகளை சோதனை மேற்கொள்ளும் இடமாக அண்ணாநகர் மேற்கு ரயில்நிலையம் இருக்கிறது. இங்கு ஒரு கூடாரம் அமைத்து, புதிய ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் செய்யும் இடமாக ரயில்வே அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications