திருப்பூர் மனைவி அந்த வீடியோவில் தோன்றியதுமே பதறிய மாப்ளை.. நீளும் மேட்ரிமோனியல் மோசடி: போலீஸ் சபாஷ்
சென்னை: ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்க வேண்டும என்றும், அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் அறிவுறுத்தியிருக்கிறது.. அதுமட்டுமல்ல, தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டிருக்கிறது.
சமீபகாலமாகவே திருமண மோசடிகள் அதிகரித்து வருகின்றன.. அதிலும் மேட்ரிமோனியல் என்ற பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி, ஏராளமான ஏமாற்று வேலைகள் நடக்கின்றன.

சமீபத்தில்கூட, திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர் போலீசில் புகார் செய்திருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. மேட்ரிமோனியலில் பேக்கரி ஓனர், தனக்கு பெண் தேடியபோது, அதில் ஒரு பெண்ணை மிகவும் பிடித்து போய்விட்டது. அவரையே திருமணமும் செய்துள்ளார்.
லட்சக்கணக்கில் பணம்
ஆனால், அந்த பெண்ணோ, ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களிடம் லட்சக்கணக்கில் நகை, பணத்தை பறித்ததாகவும், கூறப்படுகிறது.
பேக்கரி ஓனருடன் திருமணம் நடைபெற்ற 2 நாளில், அந்த பெண்ணின் செல்போனை எதேச்சையாக பார்த்தபோது, செல்போனிலிருந்த போட்டாக்களை பார்த்ததுமே, அவருக்கு தலை சுற்றிவிட்டதாம்.. அதில் தன்னுடைய மனைவி, பல ஆண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாக போலீசில் சொல்லி உள்ளார்.
அதுமட்டுமல்ல,மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்திப்பாராம் அந்த பெண்.. பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருப்பாராம். இதை ரகசியமாக வீடியோ எடுத்து, பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டுவார் என்றெல்லாம் கடந்த 8 மாதத்துக்கு முன்பு, அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. எனினும், இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை போலீசார் விசாரிக்கிறார்கள்.
பெருகும் மோசடிகள்
இந்த திருப்பூர் பெண் ஒரு உதாரணம்தான்.. இதுபோல, இன்னும் ஏராளமானோர் மேட்ரிமோனியல் பெயரில் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது என்றாலும், சிலர் இதனை தவறாக பயன்படுத்தி, அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான், இது தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத்தேடும் நபர்களை குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையை பெறுகின்றனர். அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை மோசடியில் சிக்கவைக்கின்றனர்.
பரிசுக்கான சுங்க கட்டணம்
இதில், உயர் வருமானம் தரும் போலி முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பரிசுக்கான சுங்க கட்டணம் செலுத்துமாறு கேட்பது அல்லது ஒரு அவசர நிலைக்காக பணம் கேட்பது போன்றவைகள் அடங்கும்.
சமீபத்தில் திருமண வரன்தேடும் தளங்களைப் பயன்படுத்தி, போலி முதலீட்டு தளங்களில் (www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www,cityindexmain.com, www,cityindexlimited.com) பெருந்தொகையை முதலீடு செய்யவைப்பதில் ஒரு புதிய போக்கு காணப்படுகிறது. இந்த தளங்கள் நம்பகமானவை போல தோற்றமளிக்கும்.
போலி வெற்றிக் கதைகள் - தவறான லாபங்கள்
மேலும், போலி வெற்றிக்கதைகள் மற்றும் தவறான லாபங்களை காட்டும். மக்கள் சிறிய தொகையை முதலில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மேலும், ஆரம்பத்தில் சிறிய தொகைக்கான லாபங்களையும் தருகின்றனர். இதனால், நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்யும்போது, பணத்தை திரும்பப்பெற முடியாது. மோசடியாளர்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.
தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன
எனவே, பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும். அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒருபோதும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் அதிக வருமானம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
கட்டணமில்லா உதவி எண்
அந்நியர்களுடன் வாட்ஸ்-அப் அல்லது பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிர வேண்டாம். நம்பகமான முதலீடுகள் முறையான சேனல்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுககவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் பதிவு செய்யவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications