குடும்ப தலைவிக்கு ரூ.1000.. இதெல்லாம் வேற லெவல் யோசனை.. ஸ்டாலினின் "அந்த" முடிவு.. பெரும் வரவேற்பு
சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வருடத்தில் செப்டம்பரில் இருந்து கொடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும்.

கட்டணம் இல்லா பேருந்து பயணம் மூலம் 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதத்தில் இருந்து தர இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1 கோடி மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற உள்ளனர்.
இது இல்லாமல் நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் பல முக்கிய உதவிகளை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றுக்குறையை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. துறை வாரியாக என்னால் சாதனைகளை அடுக்க முடியும். இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர்,..
விண்ணப்பங்கள்: இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட தொடங்கி உள்ளன. ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. அதேபோல் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முகாம்கள் வழியாக பெண்களை வழி நடத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற உள்ளனர்.
யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:
- குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
- ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
- 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
- ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
அந்த ஒரு விஷயம்: திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருநங்கைகள் குடும்ப தலைவிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது மிகப்பெரிய சமூக நீதி திட்டமாக, அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல வீடுகளில் திருநங்கைகள் சேர்ந்து குழுவாக வசிக்கிறார்கள். இதில் சிலர் ஒரே குடும்பமாக பதிவு செய்து ரேஷன் அட்டைகளும் பெறுகிறார்கள். சிலர் தனி ரேஷன் அட்டைகள் பெறுகிறார்கள். இதனால் இவர்களும் இப்போது ரூ. 1000 பெறுவது எளிதாகி உள்ளது. சமூக நீதி மிக்க இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சர்ச்சை: அதே சமயம் இந்த விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தை ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் படிவத்தில் முதலமைச்சரின் படம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் படிவத்தில் உள்ள விதவை என்னும் வார்த்தை சர்ச்சையாகி உள்ளது.
கைம்பெண் என்ற வார்த்தையை விதவைக்கு பதிலாக பயன்படுத்த முனைந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் அவரின் பெயர் கொண்ட திட்டத்தில் விதவை என்ற வார்த்தை இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்த பெயரை கைம்பெண் என மாற்றுவது கலைஞருக்குப் பெருமை சேர்க்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications