நல்லாயிருக்காங்க.. இட்லி சாப்பிட்டாங்க.. மாஜிக்கள் என்னா பொய்ய்ய்! உண்மையை தோலுரித்த ஆறுமுகசாமி!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருளில் இருந்தார் என ஆறுமுகசாமி ஆணையம் சொல்லியுள்ள நிலையில் சிஆர் சரஸ்வதி உள்பட முன்னாள் அமைச்சர்கள் கம்பி கட்டும் கதைகளை எல்லாம் சொன்னார்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மயக்கம் அடையும் முன்பே 3 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்தது. அப்போதே அதற்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவர் மயக்கமடைந்து சுயநினைவை இழந்திருக்க மாட்டார்.
ஆனால் அவருக்கு வெறும் காய்ச்சலுக்கான பாராசிட்டாமல் மாத்திரை மட்டும் கொடுத்துள்ளனர். ஜெயலலிதா சுயநினைவில் இருந்த போதும் அவரது உடல்நலப் பிரச்சினை குறித்து அவரிடம் சொல்லப்படவில்லை. அவருக்கு தகவலே தெரிவிக்காமல் இருளில் வைத்திருந்தது அதிர்ச்சியாக உள்ளதாக ரிப்போர்ட் கூறுகிறது.

ஜெயலலிதா
இவ்வாறு இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டிருந்த விஷயம் அவரது உண்மையான தொண்டர்களை வேதனையடைய செய்துள்ளது. உண்மை இவ்வாறிருக்க, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தப்ப முன்னாள் அமைச்சர்கள் என்னென்ன அலப்பறைகளை செய்தார்கள் தெரியுமா? ஜெயலலிதாவின் உடல்நிலை என்னாச்சு என தமிழக மக்கள் சோகத்துடன் காத்து கொண்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அம்மா இட்லி சாப்பிட்டார் என்றார். அது போல் சி.ஆர். சரஸ்வதியோ , அம்மா நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார். இதை நான் சொல்லவில்லை. டாக்டர் பிரதாப் ரெட்டியே சொன்னார். இதே போல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நிறைய பேட்டி அளித்திருந்தனர்.

பொன்னையன்
அது போல் பொன்னையன், தம்பிதுரை, மறைந்த மதுசூதனன் உள்ளிடேடோரும் ஜெயலலிதா உணவு குறித்து பேட்டி கொடுத்தனர். எல்லாவற்றுக்கு மேல் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவின் உணவு பில் மட்டும் ரூ 1.17 கோடியானது. இந்த பில் வெளியாகி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அம்மா உணவகம் மூலம் ஊருக்கே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த ஜெயலலிதாவுக்கோ ரூ 1.17 கோடி பில் போடப்பட்டிருந்தது.

அதிமுக பொதுச் செயலாளர்
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற போது கண்ணீர் மல்க பேசினாரே, கோட்டையிலிருந்து கிளம்பிட்டீங்களா, என்ன சாப்பிடுறீங்க என்றெல்லாம் கேட்பேன் என நா தழுதழுக்க கூறியிருந்தார். ஆனால் ஆறுமுகசாமி ஆணையமோ முன்னாள் அமைச்சர்கள் கூறிய தகவல்கள் எல்லாம் பொய் என்பதை நிரூபித்துவிட்டது. ஜெயலலிதா உடல்நலம் நன்றாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையே பொய்யானது கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications