மயில்சாமியின் வீட்டில் எழுதப்பட்டிருக்கும் பொன்னான வாசகம் என்ன தெரியுமா? வாழ்க்கையின் தத்துவம் அது!
மயில்சாமி வீட்டில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் மயில்சாமியின் வீட்டில் வாழ்வியலுடன் பொருந்தி போகும் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். அது என்ன தெரியுமா?
நடிகர் மயில்சாமி என்றால் நல்ல மனிதர், நல்ல குணம் கொண்டவர் என்றுதான் முதலில் கூறுகிறார்கள். அதன் பிறகுதான் அவரது நடிப்பு, மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பு இதெல்லாம்!
ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கையில் அடிபட்டு முன்னுக்கு வந்தவர். எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி மேலே வந்தவர். தன்னை போல் திறமையுடன் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பார்.

சிவபக்தர்
சிவபக்தரான அவர் எப்போதும் யாரை பார்த்தாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்து செல்வார். சிவனடியாராகவே மாறி தொண்டு செய்து வந்தார். அதோடு மழை, புயல், வெள்ளம் காலங்களில் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் ஏழை மக்கள் வயிறார உணவு சாப்பிடுகிறார்கள் என்றால் அது மயில்சாமி கொடுத்த உணவாக இருக்கும்.

நெகிழ்ச்சி
அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். மயில்சாமி அண்ணன் சாப்பாடு கொடுத்தாரு என! வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் நடுவில் வாழும் காலத்தில் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைப்பார். அதை கொள்கையாகவே நினைத்து வாழ்ந்தவர் மயில்சாமி. அவர் சிவன் பக்தர் என்பதால் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

பரிசோதித்த மருத்துவர்கள்
இதையடுத்து அதிகாலை கோயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சாலிகிராமத்தில் உள்ள வீடு
இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் நடிகர்கள் யாராக இருந்தாலும் சொல்வது ஒன்றும் என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். என்னை திருவண்ணாமலைக்கு வருமாறு அழைத்தார்.

ஜெயராம் பேட்டி
நடிகர் ஜெயராம் கூறுகையில் நானும் மயில்சாமியும் மிமிக்ரி செய்து ஒரே நேரத்தில் சினிமாவுக்குள் வந்தோம். அவர் வாரத்திற்கு ஒரு நாள் எனக்கு போன் செய்துவிடுவார். என்னை நீண்ட காலமாக திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டே இருந்தார். ஷூட்டிங் இருந்ததால் என்னால் போக முடியவில்லை. கடந்த முறை சிவராத்திரி விழாவின் போதும் என்னை திருவண்ணாமலைக்கு அழைத்தார். அப்போதும் என்னால் வரமுடியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலைக்கு சிறிய யானை வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டார், நானும் செய்து தருவதாக தெரிவித்தேன். ஆனால் இந்த சிவராத்திரியில் அவர் அண்ணாமலையாரிடமே போய் சேர்ந்துவிட்டார் என உருக்கமாக தெரிவித்தார்.

நல்லவன் வாழ்வான்
மயில்சாமியின் வீட்டின் முகப்பில் நல்லவன் வாழ்வான் என்ற வாசகமும் மறு புறம் அன்பே கடவுள் இல்லம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அது போல் அவரது வீட்டில் பெரிய சைஸில் விநாயகர் படமும் வைக்கப்பட்டுள்ளது. நல்லவன் வாழ்வான், அன்பே கடவுள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவம் ஆகும். இவரது உதவும் குணத்தை பார்க்கும் பிறர் தாமும் வாழ்வில் இப்படி உதவலாம் என்ற ஒரு இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்திவிட்டார் மயில்சாமி என்றே சொல்லலாம். ஒரு ஆர்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக வேட்டியை கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக டீ குடிப்பார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications