ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதும்! போலீஸில் சரணடையும் முன்பு மர்ம கும்பல் செய்த பூஜை! நடந்தது என்ன?
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததும் ரத்தம் பதிந்த கத்தியை, ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்த பிறகே போலீஸில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் கைகளில் அரிவாள் கத்தியுடன் ஓடிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்ற பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பின்னிருந்து செயல்பட்டது ஆம்ஸ்ட்ராங் என ஆற்காடு சுரேஷின் தம்பியும் அவருடைய ஆதரவாளர்களும் கருதி வந்தனர். இதனால் ஆற்காடு சுரேஷின் சகோதரர் கூலிப்படையை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 8 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்று ரத்த கறை படிந்த அரிவாளை ஆற்காடு சுரேஷின் படத்தின் முன்பு வைத்து பொன்னையன் உள்ளிட்டோர் பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர்.
யார் இந்த ஆற்காடு சுரேஷ்?: புளியந்தோப்பை சேர்ந்த கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சரணடைந்த பொன்னை பாலு போலீஸிடம் கூறியிருப்பதாவது: "எனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல் என்னையும் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதால் எனது மனைவி பயத்தில் என்னை விட்டுபிரிந்து சென்றுவிட்டார். எனவே அவர்கள் என்னை கொல்வதற்கு முன்பு நான் அவரை கொன்றுவிட்டேன். இதற்காக தென்னரசு கொலை வழக்கில் என்னோடு சிறையில் இருந்தவர்கள், என் அண்ணன் சுரேஷின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொன்றேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications