நீங்கள் சொல்றது வாஸ்தவம்தான்.. அப்ப இங்க ஏன் வர்றீங்க.. உங்களால் ஆவதை பாருங்க.. கடுகடுத்த ஓபிஎஸ்?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸிடம் வரும் சமாதான தூதுவர்களிடம் அவர் என்ன பேசி அனுப்பியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என தீர்மானம் கொண்டு அந்த பதவியை நீக்கிவிட்டனர். அதற்கு பதிலாக அதிகாரம் கொண்ட பதவிகளாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் தற்போது அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்றும் நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அந்த பதவி எடப்பாடி பழனிச்சாமிக்குதான் வழங்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் போர் கொடி உயர்த்தி வருகிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஓபிஎஸ்தான், அவர்தான் அம்மாவின் அரசியல் வாரிசு என கூறி ஒற்றைத் தலைமை பதவியை ஓபிஎஸ்ஸுக்கே கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது தொடர்பாக கடந்த 6 நாட்களாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ஒற்றைத் தலைமை வேண்டாம்
ஒற்றைத் தலைமை வேண்டாம் என்றும் இரட்டை தலைமையே நல்லாதானே போய்கிட்டுருக்கு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை குறித்து எடப்பாடி பழனிச்சாமி இதுவரை வாய்திறக்கவில்லை. இதனால் அவர் ஒற்றைத் தலைமையில் தீவிரமாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

தூது வந்த மூத்தவர்கள்
இதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளை அனுப்பி ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறாராம். தம்பிதுரை, செங்கோட்டையன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸிடம் சமாதானம் பேசியுள்ளனர். அப்போது கட்சியில் உள்ள முக்கிய பதவியான அவைத் தலைவர் பதவியை கொடுப்பதுடன், மகன் ரவீந்திரநாத்திற்கு கடைசி வரை சீட் கொடுக்கிறோம்.

விட்டு கொடுக்க முடியாது
எனவே ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுத்துவிடுங்கள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆதரவு உங்களை காட்டிலும் ஓபிஎஸ்ஸுக்கே இருக்கிறது. அவருடன் (இபிஎஸ்) போட்டியிட்டாலும் உங்களால் வெல்ல முடியாது என்றனராம். இதனால் கோபமடைந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு அதிகம்.

கையெழுத்து
பெரும்பாலான நிர்வாகிகளும் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். பிறகு ஏன் என்னை வந்து சமாதானப்படுத்துகிறீர்கள், உங்களால் ஆனதை பாருங்கள். எதுவாக இருந்தாலும் எந்த தீர்மானம் நிறைவேற்றினால் கடைசியில் கையெழுத்தை பெற என்னிடம்தான் வந்தாக வேண்டும் என கூறி அனுப்பினாராம். எனவே இரட்டை தலைமையில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications