"அழகிரி.. அழகிரி".. மதுரை மாநகரில் முழங்கிய "பானு முபாரக்".. திகைத்து பார்த்த திமுக.. நடந்தது என்ன?
அழகிரி பெயரை சொல்லி பானு முபாரக் பதவியேற்று கொண்டுள்ளார்
சென்னை: நேற்றைய தினம் மதுரை மாநகராட்சி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.. இதில் சுவாரஸ்ய சம்பவங்களும் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சி கூட்டரங்களில் கவுன்சிலர்கள் பதவியேற்பதை பார்க்க உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை..
அதனால் பதவியேற்பதை இவர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது.. இதற்காகவே பிரமாண்ட பந்தலும் போடப்பட்டிருந்தது.
அழகிரி வீட்டுக்கு பறந்த போன்.. திமுக வயிற்றில்
பதவி பிரமாணம்
புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருவர் பின் ஒருவராக கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்... அதில் எத்தனையோ கவுன்சிலர்களுக்கு அந்த உறுதிமொழி படிவத்தை படிக்க தெரியவில்லையாம்.. இத்தனைக்கும் அவை தமிழில்தான் இருந்திருக்கிறது. பிறகு, மாநகராட்சி ஆணையர் சொல்ல சொல்ல, கவுன்சிலர் அதை திரும்ப சொல்லி பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
செல்லூர் ராஜு
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 64-வது வார்டு உறுப்பினர் சோலைராஜா, பதவியேற்பின்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேரின் பெயரையுமே தவிர்த்துவிட்டு, செல்லூர் ராஜூ பெயரை மட்டும் சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.. இதை பார்த்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. பாஜக கவுன்சிலர் பூமா ஜனாஸ்ரீ முருகன் பதவியேற்று முடித்ததுமே மைக்கில், ''பாரத் மாதா கி ஜே'' என ஓங்கி முழக்கமிட்டு சென்றார்.
முதல்வர் ஸ்டாலின்
பெரும்பாலானோர், "தளபதி நல்லாசியுடன்", முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்லி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு புதிய கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொண்டனர்... 4 திமுக கவுன்சிலர்கள் மட்டும் பெரியார் பெயரை சொல்லி கையெழுத்திட்டுள்ளனர். சிலர் அண்ணா, கலைஞர் பெயரில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பானு முபாரக்
ஆனால் இந்த பதவியேற்பு நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் பெற்றது பானு முபாரக் என்பவர்தான்.. 47வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டவர்.. அழகிரியின் தீவிரமான ஆதரவாளர்.. திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மேகலா என்பவரை எதிர்த்துதான் பானு முபாரக் போட்டியிட்டார்.. அழகிரியின் நெருங்கிய நண்பரும், நிழல் என்று சொல்லக்கூடியவருமான முபாரக் என்பவரின் மனைவிதான் இவர்.. தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக செயல்பட்டதாகவும், சொந்த செல்வாக்கை பயன்படுத்தி பானு முபாரக் வெற்றிக்கு அழகிரி மறைமுகமாக உதவி செய்ததாகவும் ஏற்கனவே, ஒரு முணுமுணுப்பு இருந்து கொண்டே இருந்தது.
அழகிரி.. அழகிரி
இந்நிலையில், பானு முபாரக் அபார வெற்றி பெற்றதையடுத்து, கவுன்சிலராக பதவியேற்றார்.. அப்போது, ''தலைவர் கலைஞரின் நல்லாசியுடன், குடும்பத் தலைவர் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியின் நல்லாசியுடனும், தமிழக முதல்வர் தளபதியின் நல்லாசியுடனும் மதுரை மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்கிறேன்'' என்றார்... தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக செய்துவிட்டு, இங்கு வந்து தளபதி பெயரை ஏன் சொல்கிறார்? என்ற சலசலப்பு திமுகவினர் மத்தியில் எழுந்தது.. இருந்தாலும் அழகிரி வாழ்க என்றுசொல்லி உறுதிமொழி எடுத்து கொண்டது பானு முபாரக் மட்டும்தான்!
மேகலா
இந்த தேர்தல் வெற்றியில் என்ன சுவாரஸ்யம் என்றால், அழகிரியின் ஆதரவாளர்களான முபாரக் மந்திரியின் மனைவி பானுவை எதிர்த்து, முன்னாள் அவைத் தலைவர் இசக்கிமுத்துவின் மனைவியும் போட்டியிட்டார். இருவருமே சுயேச்சைகள்தான். இதற்கு நடுவில்தான், காங்கிரஸ் வேட்பாளர் மேகலா களத்தில் குதிக்கவும் போட்டி படுமும்முரமாக இருந்தது.. இறுதியில், பானு முபாரக் மந்திரி, பாஜக வேட்பாளரைவிட அதிகமாக 2,270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டார்.. இந்த வெற்றி திமுக தரப்புக்கு அப்போதே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதாவது இது அழகிரிக்கு கிடைத்த வெற்றி என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.. இப்போது வெளிப்படையாகவே அழகிரியின் பெயரில் உறுதிமொழி எடுத்து கொள்ளவும், திமுக வெற்றிக்கு எதிராக அழகிரி களப்பணியானது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் திமுகவினர்.