மதுரை- சென்னை! வந்தே பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு தெரியுமா? தேஜஸ், வைகை எக்ஸ்பிரஸுடன் ஒரு ஒப்பீடு
சென்னை: வந்தே பாரத் ரயிலில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வந்தே பாரத் எனும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பாதுகாப்பு, பயணிகளுக்கு சவுகரியம் உள்ளிட்டவை இருப்பதால் பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதை விரும்புகிறார்கள்.

அந்த வகையில் தமிழகத்திற்கு 4 வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. சென்னை- மைசூர், சென்னை- கோவை, நெல்லை- சென்னை, சென்னை- விஜயவாடா ஆகிய 4 ரயில்கள் கிடைத்துள்ளதால் மேற்கண்ட வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அந்த வகையில் ஏற்கெனவே இரு வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டநிலையில் இன்று சென்னை- நெல்லை, சென்னை- விஜயவாடா ஆகிய இரு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. சென்னை- நெல்லை இடையே தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தென்தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் அப்பகுதியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ரயிலின் கட்டணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஜிஎஸ்டி வரி உள்பட சாதாரண ஏசி பெட்டியில் ஒருவருக்கு டிக்கெட்டின் விலை ரூ 1,620 ஆகும். அது போல் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்க ஒருவருக்கு கட்டணமானது ரூ 3,025 வசூலிக்கப்படுகிறது. உணவு உள்பட இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த ரயில் வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். ஆரம்ப கட்டம் என்பதால் 652 கி.மீ. தூரத்தை மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் கடக்க உள்ளது. அது போல் இந்த ரயில் மதுரையில் நிற்கும் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்கு பயணிப்போருக்கும் உதவியாக இருக்கும். மதுரையிலிருந்து சென்னைக்கு பயணிக்க வந்தே பாரத் ரயிலில் சேர் காரில் கட்டணமாக ரூ 1425, எக்ஸிகூட்டிவ் கட்டணமாக ரூ 2535 வசூலிக்கப்படுகிறது.
அது போல் மதுரை- சென்னை செல்ல தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேர்காரில் 1,220 ரூபாயும் எக்ஸிகூட்டிவ் கோச்சில் 2320 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அது போல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சேர்காரில் மதுரையிலிருந்து சென்னை செல்ல ரூ 685 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது மதுரைக்கு 7.55 மணிக்கு வரும். அங்கிருந்து புறப்படும் வந்தே பாரத் செனனைக்கு மதியம் 1.50 மணிக்கு வரும். இதன் மொத்த பயண நேரம் 5 மணி நேரம் 55 நிமிடங்களாகும்.












Click it and Unblock the Notifications