சைவத்தில் உருண்டைக் குழம்பு! அசைவத்தில் மீன் குழம்பு! துர்கா ஸ்டாலின் சொன்ன சுவாரசியம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த உணவு எது என்பதை அவருடைய மருமகளும் இன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மனைவியுமான துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தினசரி பழக்கவழக்கங்களை இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவார்களா என்றால் அது சந்தேகம்தான். எத்தனை மணிக்கு அவர் தூங்கினாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவர்.

அது எவ்வளவு தூரம் பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி, கட்சி கூட்டங்களுக்குச் சென்றாலும் சரி, அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார். பிறகு தினசரி பேப்பர்களை எல்லாம் படித்து முடித்துவிடுவாராம்.
பேப்பர்களில் வரும் தொகுதி பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை படித்து வைத்திருப்பார். ஆளும் கட்சியாக இருக்கும் போது நாளிதழ்களில் வரும் தொகுதி விஷயங்களை படித்துவிட்டு அதை அதிகாலையிலேயே சரி செய்துவிடுவாராம். பிறகு எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பேசும் போது, அப்படியா அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதே என ஆதாரத்துடன் காட்டுவாராம்.
எந்த விஷயத்தையும் உற்று கவனித்து அதற்கு தீர்வை கொடுத்துவிடுவாராம். எதுவாக இருந்தாலும் நன்கு நினைவில் வைத்துக் கொள்வாராம். அது போல் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தனக்கே உரித்தான நக்கல் நையாண்டியுடன் பதில் அளிப்பதில் அவர் வல்லவர். அது போல் தான் ஏதாவது தவறு செய்துவிட்டால் யாராக இருந்தாலும் வருத்தம் தெரிவிக்க தயங்கவே மாட்டாராம்.
அரசியல் நாகரீகத்தை தனது தொண்டர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர். அரசியல் வேறு, நட்பு வேறு என கூறுபவர். இல்லாதவர்களுக்கு உதவிகளை செய்துவிடுவார். எப்போதும் தமிழ் தமிழ், தமிழக மக்கள் என நினைப்பில் செயல்பட்ட அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.
அவர் காலமானாலும் அவர் விட்டுச் சென்ற இலக்கிய பணிகளையும் அரசியலையும் படித்துத் தெரிந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதாது. அந்தளவுக்கு அவரை படிக்க நிறைய இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்து அவருடைய மருமகள் துர்கா நாயகி டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், "மாமா (கருணாநிதி) அசைவத்தில் எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிட்டார். பிறகு வயது மூப்பு காரணமாக சைவத்திற்கு மாறினார். சைவத்தில் உருண்டை குழம்பு வைத்தால் மாமாவுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இறைச்சிகளை விட்டாலும் மீன் குழம்பை நீண்ட காலம் நாள் சாப்பிட்டு வந்தார்.
அவருக்கு விரால் மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் காரம் இல்லாமல் அவருக்கு தனியாக குழம்பு வைப்போம், வீட்டில் இரு குழம்புகள் வைப்போம். கொஞ்சம் காரச்சாரமாக வீட்டில் இருப்போருக்கு ஒரு குழம்பு, மாமாவுக்கு காரம் குறைச்சலாக ஒரு குழம்பு வைப்போம். வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் மீன் குழம்பு வைக்கும் போது நானும் அத்தையும் பக்கத்திலேயே இருந்து இப்படி செய்ங்க, அப்படி செய்ங்க என சொல்வோம். இவ்வாறு துர்கா தெரிவித்துள்ளார். இது பழைய பேட்டி என்றாலும் தற்போதும் வைரலாகி வருகிறது.
அது போல் அவர் கீரைகள் உள்ளிட்டவைகளையும் விரும்பி உண்பாராம். ஒரு முறை தொண்டை சளியை விரட்டும் என தெரிந்து தூதுவளை கீரையை 3 வேளையும் சாப்பிட்டுள்ளார். அது சூட்டை கிளப்பி, கருணாநிதியின் தொண்டையில் புண்ணாகி பேச முடியாமலும் விழுங்க முடியாமலும் போய்விட்டது. பிறகு காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரனை அழைத்துள்ளார். அவர் வந்து தொண்டையை பார்த்துவிட்டு என்ன சாப்பிட்டீங்க அய்யா என கேட்டுள்ளார். அதற்கு தூதுவளை ரெண்டே ரெண்டு இலைதான் சாப்பிட்டேன். அதுக்கே இப்படி ஆகிவிட்டது, இரட்டை இலை என்றாலே பிரச்சினைதான் போல என நையாண்டி செய்தாராம். இதை மோகன் காமேஸ்வரனே ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications