"டிரஸ்ஸை கழட்டு".. ஸ்டேஷனில் சவுண்டு விட்ட பாஜக ராஜா.. ஜெயிலுக்கு போன "மலர்க்கொடி"யை ஞாபகம் இருக்கா?
கோவை மாவட்ட பாஜக நிர்வாகி மலர்க்கொடி திமுக மீது குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: "காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வெளியே வா.. ஒத்தைக்கு ஒத்தை வா.." என்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, போலீஸ்காரரையே தரக்குறைவாக பேசி மிரட்டினாரே பாஜக நிர்வாகி... அவருக்கு அக்கட்சியின் மலர்க்கொடி ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளுங்கட்சி மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயத்துக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.. அரசு பஸ்சில் போலீசாருக்கும் பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.. அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள் 2 தரப்பிலும் விசாரித்தனர்.. அப்போது இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒத்தைக்கு ஒத்தை
பிறகு, பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட சில நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா பணியில் இருந்த ரமேஷ் என்ற போலீசாரை ஒருமையில் பேசியதுடன், டிரஸ்ஸை கழட்டி வைத்து விட்டு வெளியே வா, ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று கூறினார்.. பின்பு அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
ஜெயில்
இதையடுத்து, போலீஸை தரக்குறைவாக பேசியதையடுத்து, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக மாநில செயலாளரும், திருப்பூர் மாவட்ட பார்வையாளருமான மலர்கொடி தாராபுரம் ஜெயிலுக்கு சென்று, ராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.
சீனில் மலர்க்கொடி
"பாஜகவின் வளர்ச்சியை தடுக்க, நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.. ராஜா பஸ்ஸில் சென்றிருக்கிறார்.. அந்த பஸ்ஸில் இருந்த ஒரு பெரியவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது... அப்போது, அங்கிருந்த போலீஸ்காரர், அந்த பெரியவரை தாக்கியுள்ளார்... இதை நிர்வாகி ராஜா தட்டிக் கேட்டுள்ளார்.. அதற்குதான் பிரச்சனை செய்துள்ளார்கள்.. போலீசாருக்கும், ராஜாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்ட நிலையில், மறுபடியும் இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது... இதில், ஆளும் கட்சியினரின் அழுத்தம் உள்ளது... பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சப்பட்டு, இதுபோன்ற பொய் வழக்குகள் போடப்படுவதால்,, பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது" என்றார்.
பூஜையறையில்
இந்த மலர்க்கொடி யார் என்று தெரிகிறதா???? கேடி ராகவன் வீடியோ விவகாரம் வெளியானபோது, அப்புகார் குறித்த விசாரணையை இவரிடம்தான் பாஜக தலைமை ஒப்படைத்தது.. மலர்க்கொடி இதை பற்றி விரிவாக விசாரிப்பார், அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலையும் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.. மலர்க்கொடியும் தன்னுடைய விசாரணை குறித்து செய்தியாளர்களுக்கு அப்போது பேட்டி அளித்திருந்தார்..
வழிகாட்டி
"இந்த புகார் குறித்து அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்துவோம். அனைத்து கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்வோம். இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் எப்படி ராகவனுடன் பேசினார்? ஏன் பேசினார்? அவர் பாஜகவின் உறுப்பினரா? ராகவனை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டும் என்று ஏதாவது சதி வேலை செய்யப்பட்டதா? என்பதையெல்லாம் விசாரிக்க உள்ளோம்.. பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு இந்த குற்றங்களின் தன்மைகள், அதை எப்படி விசாரிக்க வேண்டும் என்று தெரியும்... அவர் எங்களுக்கு வழிகாட்டுவார்" என்று சொன்னவர்தான் மலர்க்கொடி.
ராஜீவ் காந்தி
ஆனால், அதற்கு பிறகு அந்த விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை.. இதைதான் 2 நாட்களுக்கு முன்பும் திமுகவின் ராஜீவ்காந்தியும் ஒரு ட்வீட் போட்டு கேட்டிருந்தார்.. "கே.டி.ராகவன் விவகாரத்தில் அமைக்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி அறிக்கை என்ன ஆனது? திரு அண்ணாமலை. விசாரணை அறிக்கையில் அண்ணாமலையும் மதன் ரவிச்சந்திரனும் கூட்டு என தெரியவரும் என்றா? என ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி இருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.