பெரிய பதவியில் உதயநிதி? பாஜக தந்த கமெண்ட்.. "எச். ராஜா யாருங்க இதை சொல்ல?" செல்வப்பெருந்தகை காட்டம்
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பதிலடிகளை தந்து வருகின்றன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. இந்த தகவலை இதுவரை எந்த தமிழக அமைச்சர்களும் மறுக்கவில்லை. மாறாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், அதை வரவேற்பதாகவே பேட்டிகளை தந்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள்: ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. உதயநிதியை துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு எடப்பாடி, "எப்படி ஆதரிக்க முடியும்? அவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். திமுக-வில் எத்தனையோ ஆண்டுகளாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. ஏனென்றால் அது குடும்ப கட்சி" என்று கருத்து கூறியிருந்தார்.
சனாதன தர்மம்: அதேபோல, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடமும் இதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியிருந்தனர்.. அதற்கு எச்.ராஜா, "சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.. அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி வைத்துள்ளதால், மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
அதனால்தான் சனாதானத்தை கொசு டெங்கு போன்றவை அழிப்பது போல் பேசிக்கொண்டு வருகிறார்.. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் விரைவில் ஆனால் தமிழ்நாடு இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது" என்று எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
செல்வப்பெருந்தகை இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது என தீர்மானிக்க எச்.ராஜாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என செல்வப்பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னை, மதுரையை சேர்ந்த தமாகா மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், அவர்கள் காங்கிரசில் இணைந்தனர்..
எச்.ராஜா யார்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதை தமிழக காங்கிரஸ் வரவேற்கும். உதயநிதியை துணை முதல்வராக்குவது பற்றி ஆட்சி மற்றும் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.
அதுகுறித்து எச்.ராசா கருத்து சொல்லக்கூடாது. பாஜகவினருக்கு மதவாதம், வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது என்று தீர்மானிக்க பாஜவை சேர்ந்த எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அதனை தீர்மானிக்க முடியும். இதனை கூறுவதற்கு எச்.ராஜா யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று காட்டமாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications